ஆப்நகரம்

சிறுபான்மையினருக்கு சினிமா பிரபலங்கள்... ப.சிதம்பரத்துக்கு இலக்கிய ஆர்வலர்கள் ஆதரவு... என்ன நடக்குமோ?!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட எட்டு பேர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Samayam Tamil 9 Oct 2019, 6:28 pm
ஐ.என். எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் அக்டோபர் 17 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Chidambaram-1-770x433


"அவர் மீதான இந்த கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல்" என, ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து கூறி வருகிறார்.

அவரது இந்தக் கருத்தை ஆதரிக்கும் விதத்திலும், ப.சிதம்பரத்தின் கைதுக்காக மத்திய அரசை கண்டித்தும், கவிஞர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலர் இன்று கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ப.சிதம்பரம் சிறந்த அரசியல்வாதி மட்டுமல்ல, மிக உயர்ந்த இலக்கியவாதியும் கூட. இந்திய நாட்டின் குறிப்பிடத்தக்க பொருளியல் அறிஞர். ஆசியாவின் சிறந்த நிதியமைச்சராக இருமுறை விருது பெற்றவர்.

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் சரளமாக பேசும், எழுதும் திறம் படைத்தவர். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்.

49 பேர் மீது போட்ட வழக்குக்கு, பாஜகவ தப்பு சொல்லாதீங்க: மத்திய அமைச்சர்!

இலக்கியவாதிகளின் குருகுலமாகத் திகழ்ந்த "இலக்கிய சிந்தனை" அமைப்பின் நிறுவனர். "எழுத்து" எனும் இலக்கிய அமைப்பினை நிறுவி நிகழ்கால தமிழ் இலக்கியத்திற்குப் பெருமை சேர்த்து வருபவர்.

இந்த நிலையில், அவர் மீது பொய்வழக்குகளைப் புனையும் அரசையும், தொடர்ந்து அவரது ஜாமீன் மறுக்கப்படும் ஜனநாயகப் படுகொலையையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் துணைவேந்தர்களான டாக்டர் அவ்வை நடராசன், டாக்டர் ம. ராசேந்திரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், கவிஞர்கள் சல்மா, ஏகாதேசி, இலக்கியா நடராஜன், பதிப்பாளர்கள் விஜயா வேலாயுதம், கவிதா சேது சொக்கலிங்கம் ஆகியோர் இக்கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்துவிடப்படும் குழு வன்முறையால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இந்தக் கொடுமையை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட பிரபலங்கள் கடிதம் எழுதியிருந்தனர். இதற்காக அவர்கள் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீதிமன்ற காவலில் உள்ள ப.சிதம்பரத்தை ஆதரித்து, இலக்கிய ஆர்வலர்கள், கவிஞர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி