ஆப்நகரம்

பொள்ளாச்சியில் பதற்றம், கடையடைப்பு - 6 டிஎஸ்பி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு!

பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து, பொள்ளாச்சியில் டிஎஸ்பிகள் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Mar 2019, 11:57 am
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் கொடூர சம்பவங்கள் வெளியானதை அடுத்து, கைது, போராட்டம், பாதுகாப்பு அதிகரிப்பு என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil Pollachi Police


இதுகுறித்து இளம்பெண் ஒருவர் அளித்த புகாரை அடுத்து, விவரம் வெளியுலகிற்கு தெரியவந்தது. இதுதொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்த ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இவற்றை பறிமுதல் செய்த போலீசார், தடவியல் துறையிடம் ஆய்விற்காக ஒப்படைத்துள்ளனர். குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து குற்றவாளிகள் பயன்படுத்திய பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. அங்கு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சியில் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அவர்கள், பாலியல் கொடூர வழக்கில் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சியில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், 6 டிஎஸ்பிகள் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி