ஆப்நகரம்

குற்றாலம் அருவியில் குளித்த கர்ப்பிணி பலி

குற்றாலம் அருவியில் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 29 Jul 2019, 10:48 am
Samayam Tamil Courtallam
விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை குற்றாலம் அருவியில் குளித்து மகிழ்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தற்போது சீசன் கலைக்கட்டியுள்ளது. வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக தென்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் குற்றாலம் அருவியை நோக்கி படை எடுத்த வண்ணம் உள்ளனர். விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் அருவியில் குறைந்த அளவிலேயே நீர் விழுந்ததால் சுற்றுலா வந்தவர்கள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த காளீஸ்வரி என்ற கர்ப்பிணி பெண் ஒருவர், தனது சுரேஷ் குமார் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் குற்றாலத்திற்கு வந்திருந்தார்.

சிற்றருவி பகுதியில், நீண்ட வரிசையில் நின்ற காளீஸ்வரி வெகு நேரத்திற்குப் பின்னர் அருவியை சென்றடைந்தார். அருவியில் அவர் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

காளீஸ்வரியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக குற்றாலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே கர்ப்பிணியின் மரணத்திற்கான காரணம் குறித்து தெரிவிக்க முடியும் என காவல் ஆய்வாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி