ஆப்நகரம்

புயல் பாதித்த மக்களிடம் கொடுத்த கடனை திரும்பி கேட்கும் நிதி நிறுவனங்கள்!

கஜா புயலால் பாதித்த மக்களிடம், கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவனங்கள் தற்போது பணம் கேட்டு நெருக்கடி கொடுப்பதாக ஏராளமான பெண்கள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் ஒ.எஸ். மணியன், நிதி நிறுவன மேலாளர்களை அழைத்து கால அவகாசம் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Samayam Tamil 5 Dec 2018, 10:23 am
கஜா புயல் பாதித்த நாகை மாவட்ட மக்களிடம், கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவனங்கள் தற்போது பணம் கேட்டு நெருக்கடி கொடுப்பதாக ஏராளமான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டனர்.
Samayam Tamil புயல் பாதித்த மக்களிடம் கொடுத்த கடனை திரும்பி கேட்கும் நிதி நிறுவனங்கள்!
புயல் பாதித்த மக்களிடம் கொடுத்த கடனை திரும்பி கேட்கும் நிதி நிறுவனங்கள்!


கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னை மரங்கள், வயல் வெளிகள் என பச்சை பசேலாக காட்சியளித்த இடங்கள் இன்று பாலைவனங்களாக மாறியுள்ளன. ஆயிரகணக்கான மக்கள் வீடு, உடமைகளை இழந்து உணவு, உடை, குடிநீர், மின்சார வசதியின்றி நிவாரண முகாம்களில் தவித்து வருகின்றனர். இதேபோல் நாகப்பட்டினம், வேதாரண்யம் போன்ற கடலோர மாவட்டங்களிலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை கஜா புயல் முற்றிலும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் அனைத்தையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவனங்கள் தற்போது பணம் கேட்டு நெருக்கடி கொடுப்பதாக ஏராளமான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முறையிட்டனர்.

இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பாதிக்கப்பட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நிதி நிறுவன மேலாளர்களை அழைத்து கால அவகாசம் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், நாங்க குழுவுல கடன் வாங்கியிருக்கோம். புயல் தாக்கினதிலிருந்து எந்த வேலையும் இல்லை; எந்த வருமானமும் இல்ல. இந்த நேரத்துல நாங்க வாங்குன கடனைத் திருப்பிக் கட்டணும்னு சொல்றாங்க. யார் யாருக்கோ கோடிக்கணக்குல கடன் தள்ளுபடின்னு சொல்றாங்க. எங்களுதெல்லாம் சின்னத் தொகை. இதை தள்ளுபடி செய்யக்கூடாதா என்று மனவேதனையுடன் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி