ஆப்நகரம்

நாளை தொடங்கவிருந்த தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் திடீர் வாபஸ்!

தண்ணீர் லாரிகள் சிறை பிடிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் விடுத்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Samayam Tamil 7 Jul 2019, 9:42 pm
தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நிலத்தடி நீர் மட்டமும் ஆழத்திற்கு சென்றுவிட்டது. இதனால் வேறு இடங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து விநியோகம் செய்யக்கூடிய சூழல் நிலவுகிறது.
Samayam Tamil Water Tanker


இதற்கு தண்ணீர் லாரிகளின் பங்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகம் முழுவதும் 25,000க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் தலைநகர் சென்னைக்கு மட்டும் சுமார் 5,000 என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் பொதுமக்களுக்கு பல கோடி லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தண்ணீர் எடுக்க இடம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கிடைக்கும் இடங்களில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு வலுத்து வருகிறது.

திருவள்ளூர், விழுப்புரம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறின. இதனால் கொதிப்படைந்த தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், சென்னையில் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

அதில் தங்களின் நிலைப்பாடு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதன்படி, தங்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்றும், இல்லையெனில் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாநில அரசு, உடனே லாரி உரிமையாளர்கள் சங்கத்தை அழைத்து, உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை தொடங்கப்படுவதாக இருந்த தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி