ஆப்நகரம்

இன்ஜினியரிங்கா, மெடிக்கலா? பிளஸ் 2 -வில் இனிமே 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதினால் போதும்!

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வில் இனிமேல் 600 மதிப்பெண்களுக்கு பதிலாக 500 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதலாம் என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

Samayam Tamil 18 Sep 2019, 10:30 pm
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தற்போது நடப்படும் பொதுத் தேர்வுகளில், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 6 பாடங்களுக்கு தலா 100 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 600 மதிப்பெண்ககளுக்கு மாணவர்கள் தேர்வெழுதும் நடைமுறை உள்ளது.
Samayam Tamil pop.


இந்த நிலையில், உயர் கல்வியில் பொறியியல் பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 5 பாடங்களை மட்டும் படித்து, இவற்றில் தலா 100 மதிப்பெண்கள் வீதம் 500 மதிபெண்களுக்கு மட்டும் தேர்வு எழுதினால் போதுமானது என தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, உயர் கல்வியில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் கணிதப் பாடத்தை தவிர்த்து, தமிழ், ஆங்கிலம், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய ஐந்து பாடங்களை படித்து, மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதினால் போதும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உயர்படிப்பில் பொறியியல், மருத்துவம் என இரண்டில் ஏதாவதொரு பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் வழக்கம்போல் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களின் மனஅழுத்தம், உயர் கல்வி குறித்த பயம் ஆகியவற்றை போக்கும் வகையில், இத்தேர்வு முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2020 -21 -ஆம் கல்வியாண்டு முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தற்போது பொதுத் தேர்வு நடத்தப்பட்டாலும், பொறியியல், மருத்துப் பட்டபடிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல், பிளஸ் 2 மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும் என தமிழக அரசு கடந்தாண்டு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி