ஆப்நகரம்

கொரோனாவுக்கு அமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறமாட்டாங்களா? - பொதுமக்கள் கேள்வி!!

தமிழகத்தில் ஆளும்கட்சி அமைச்சர்கள், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், இவர்களில் பலர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறாதது ஏன் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

Authored byபுவனை.கிரி | Samayam Tamil 8 Jul 2020, 8:59 pm
ஒட்டுமொத்த உலகையே கடந்த பல மாதங்களாக வாட்டி வதைத்து வரும் கொரோனா வைரஸ், சாமானியர் தொடங்கி, சாம்ராஜ்ஜியத்தில் உள்ளவர்கள் வரை, பாரபட்சமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது.
Samayam Tamil rgh


இதேபோன்று முன்களப் பணியாளரான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோரும் இந்த வைரசின் தாக்குதலுக்கு எளிதில் ஆளாகி வருகின்றனர்.பொதுவாழ்க்கையில் உள்ள அரசியல்வாதிகளையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை.

தமிழகத்தில் முதன்முதலாக, திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானார். அவரை தொடர்ந்து தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மின் துறை அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் ஆகியோருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோன்று, ரிஷவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்.டி அரசு உள்பட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் நான்கு பேர் கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரான ஓ.ராஜாவுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதேபோன்று, அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இப்படி ஆளுங்கட்சி அமைச்சர்கள், அமைச்சர்களின் நெருங்கிய உறவினர்கள், திமுக எம்எல்ஏக்கள் என பத்துக்கு மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால் இவர்களில், கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவான அம்மன் அர்ஜூனன் மட்டும், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இவரை தவிர, கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள ஆளுங்கட்சி அமைச்சர்கள், அவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையிலும், மணப்பாக்கத்தில் உள்ள மற்றொரு பிரபல தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கொரோனாவுக்கு அண்மையில் பலியான திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன், சென்னை குரோம்பேட்டையில் சிகிச்சை பெற்று வந்தார்.

"கொரோனா வைரஸ் தொற்றுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், நோயின் தீவிரத்தைப் பொருத்து சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் பல்லாயிரக்கணக்கில் சிகிச்சை படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் முதல்வர் முதல் ஆளும்கட்சி அமைச்சர்கள் வரை தினந்தோறும் பெருமை பொங்க ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.

ஆனால், அவர்களில் யாருக்காவது கொரோனா என்றால் உடனே வழக்கம்போல் அவர்கள் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளையே நாடுவது ஏன்" என்று பொதுமக்களும், சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

அதரபழசான இக்கேள்விக்கு கொரோனா காலத்திலாவது தமிழக அரசு விடை காணுமா என்பதே பொதுமக்கள் முன்வைக்கும் பிரதான கேள்வியாக உள்ளது.

"கொரோனாவு்க்கு சிகிச்சை அளி்க்க, தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் அங்கு சிகிச்சை பெறுவதில் என்ன தவறு என்று அரசு இதற்கு சாமார்த்தியமாக விளக்கம் தரலாம்.

அப்படியானால், குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் எங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுமா" என்ற கேள்வியையும் பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.

அடுத்த செய்தி