ஆப்நகரம்

144 ஆண்டுகளுக்குப் பிறகு தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் விழா! அமைச்சர்கள் ஆலோசனை

தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு புஷ்கரம் விழா கொண்டாடுவது குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

Samayam Tamil 22 May 2018, 5:39 am
தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு புஷ்கரம் விழா கொண்டாடுவது குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
Samayam Tamil thamirabarani


இது குறித்து செய்தி மற்றும் மக்கள் தொடர்பு வெளியிட்ட செய்தி குறிப்பு:

சென்னை, மாநில செய்தி நிலையத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஓ.எஸ்.மணியன் அவர்கள் தலைமையில், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு அவர்கள், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி வி.எம்.ராஜலட்சுமி அவர்கள், இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாமிரபரணி நதியில் புஷ்கரம் விழா கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சுற்றுலா, இந்துசமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் திரு.அபூர்வ வர்மா, இ.ஆ.ப., தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு.இரா.வெங்கடேசன், இ.ஆ.ப., இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் திருமதி.ஆர்.ஜெயா, இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் பொ.சங்கர், இ.ஆ.ப., திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தாமிரபரணி நதியில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு புஷ்கரம் விழா கொண்டாடுவது குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. புஷ்கரம் விழா என்பது நதிகளில் புனித நீராடி, வணங்குவதாகும். இந்தியா முழுவதும் உள்ள 12 முக்கிய மகா நதிகள் புனித நதிகளாக கருதப்பட்டு புஷ்கரம் விழா கொண்டாடப்படுகிறது.

இந்நிகழ்வில், பக்திப் பாடல்கள், கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் இந்நதிகளில், புனித நீராடி வணங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தாமிரபரணி நதியில், அக்டோபர் திங்களில் புஷ்கரம் விழா கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது, பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதிகள், சாலை வசதிகள், தெரு விளக்குகள், போதுமான பாதுகாப்பு வசதிகள், பேருந்து வசதிகள், வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்கள் போன்றவற்றை மேற்கொள்வது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இது குறித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைக்கேற்ப, விழாவினை சிறப்பாக மேற்கொள்ளவும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது

அடுத்த செய்தி