ஆப்நகரம்

வன்னியர் இடஒதுக்கீட்டு போராட்டத்துக்கு கிருஷ்ணசாமி ஆதரவு!

வன்னியர் இடஒதுக்கீட்டு போராட்டத்துக்கு தார்மீக ஆதரவளிப்பதாக டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Dec 2020, 8:06 pm

கல்வி, வேலைகள் மட்டுமல்லாமல், அனைத்து வளங்களும், வாய்ப்புகளும் பங்கிட்டுத் தரப்பட வேண்டும் எனவும், வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சி தார்மீக ஆதரவு தருவதாகவும் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Ramadoss - Krishnasamy


இதுகுறித்து டாக்டர் க. கிருஷ்ணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்களில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் ஏற்கெனவே அறிவித்தபடி டிசம்பர் 1ஆம் தேதி இன்று முதல் தங்களுடையப் போராட்டத்தைத் துவக்கியிருக்கிறார்கள்.

இடஒதுக்கீடுகளால் மட்டுமே எந்தவொரு சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை முழுமையாக மேம்படுத்த முடியாது. எனினும் ஆங்காங்கே கிடைக்கக் கூடிய அரசுத்துறை வேலைவாய்ப்புக்களை அனைத்துச் சமுதாயத்தினருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுப்பதே சரியானதாக இருக்க முடியும் என்பதே நம்முடைய நிலைப்பாடு.

தமிழகத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த பிரத்யேக ஆணையம் - முதல்வர் அறிவிப்பு

இடஒதுக்கீட்டை அமலாக்குவதில் 100% இடஒதுக்கீட்டு முறையை கடைபிடிக்க வேண்டுமென்று 13 ஆண்டுகளுக்கு முன்பே புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வலியுறுத்தியிருக்கிறோம். இந்த நெறிமுறையை அமலாக்கினால் முற்பட்ட, பிற்பட்ட, மிகப் பிற்பட்ட, பட்டியல் பிரிவினர் என்ற பிரிவினைகள் முற்றாக ஒழிந்து போகும். இந்த உன்னத அடிப்படையில் தான் புதிய தமிழகம் கட்சி பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை முன்னெடுத்து, தேவேந்திரகுல வேளாளர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அம்மக்களின் மக்கள் தொகைக்கேற்ப உரிய பங்கீட்டை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறோம்.

இரண்டாயிரம் ஆண்டுகால சாதிய வேறுபாடுகளுக்குத் தீர்வு காண்கிறோம் என்று சொல்லி, அதற்கு நேர்மாறாக தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளில் சாதிய அமைப்புகள் இறுக்கமாக்கப்பாட்டுவிட்டன. எனவே தமிழகத்தில் உண்மையான சமூகநீதி நிலைநாட்டப்பட வேண்டுமெனில் அனைத்துப் பட்டியல்களும் உடைத்தெறியப்பட்டு ஒவ்வொரு சமுதாய மக்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும்.

இது அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்களில் ஒவ்வொரு சமுதாயமும் தங்களுடையப் பங்கைப் பெறுவதற்காக மட்டுமல்ல, நிலங்கள் உள்ளிட்ட அனைத்து வளங்களையும், பிற வாய்ப்புக்களையும், அரசியல் அதிகாரத்தையும் அனைத்துப் பிரிவினரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்வதற்கும் வழிகோலும். மேலும் இதுவே உண்மையான சமத்துவத்தையும் சமூகநீதியையும் நிலைநாட்டுவதற்குண்டான அடித்தளமாக அமையும்.

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் போராட்டங்கள் Equality and Equity என்ற இலட்சியத்தை அடைவதற்காக இருந்தால் அவர்களுக்கு நம்முடைய வாழ்த்துக்கள். அப்படி இல்லாமல் இருந்தால் அவர்களுடைய போராட்டம் அதை நோக்கிப் பரிணமிக்க வேண்டும்.
பெரும்பாலான வன்னியர்கள் இன்னும் ஏழை, எளிய மக்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்குரிய பங்கைப் பெற வேண்டுமென்ற அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தால் நடத்தப்படுகின்ற போராட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சி தன்னுடைய தார்மீக ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி