ஆப்நகரம்

தேனியில் பலத்த மழை: கரும்பு, வாழை மரங்கள் முறிந்து நாசம்

தேனி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக, கரும்பு, வாழை மரங்கள் முற்றிலும் முறிந்து நாசமாகியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

Samayam Tamil 24 Apr 2019, 10:32 am
தேனி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக, கரும்பு, வாழை மரங்கள் முற்றிலும் முறிந்து நாசமாகியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
Samayam Tamil theni


தேனி முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவில், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக மஞ்சளாறு அணை பகுதியில் 73 மி.மீ., பெரியகுளத்தில் 63 மி.மீ., கூடலூரில் 53 மி.மீ. மழை பெய்துள்ளது.

இதன் காரணமாக தேனி அருகே வரட்டாறு, மதுராபுரி உள்ளிட்ட பகுதிகளில், நன்கு விளைந்து குலை தள்ளிய நிலையில் இருந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து நாசமாகின. அதேபோல் ஏராளமான கரும்புகளும் சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே பாதிப்புகளை முழுமையாக அதிகாரிகள் பார்வையிட்டு, நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, வீரபாண்டி, உப்பார்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் உப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் கருகும் நிலையில் இருந்த சோளம், கம்பு ஆகிய பயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

கம்பம் பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில் கம்பு, சோளம், எள், மொச்சை, மா போன்றவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு கோடை மழை பெய்யாததால் பயிர்கள் கருகி காணப்பட்டன. இந்நிலையில் கம்பத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. எனினும் மழை காரணமாக மானாவாரி நிலங்களில் காய்ந்து கிடந்த பயிர்கள் துளிர்விட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி