ஆப்நகரம்

சாத்தான் குளம் சம்பவத்துக்கு ஆறுதல் தெரிவித்த ரஜினி: கொந்தளித்த நெட்டிசன்கள்!

சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளதாக அவரது நெருங்கிய நண்பராக அறியப்படும் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 28 Jun 2020, 2:45 pm
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரை கடந்த 19ஆம் தேதி இரவு 8 மணி அளவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையை திறந்து இருப்பதாக கூறி விசாரணைக்கு அழைத்து சென்ற தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்துறையினர், அவர்கள் இருவரையும் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
Samayam Tamil ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்


அதன்பின்னர் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மறுநாள் காலையில் கோவில்பட்டி கிளை சிறையில் போலீசார் அடைத்த நிலையில், பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம்தொடர்பாக இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், 2 தலைமைக் காவலர்கள் மீது அலுவல் ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை தாமாக முன் வந்து உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரித்து வருகிறது.

சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின் போது மரணமடைந்த விவகாரம், தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் தலைவர்கள், வனிகர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் ஒன்றுபட்டு கண்டனக்குரலை எழுப்பி வருகிறார்கள். ஆனால், அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த இரங்கலும், கண்டனமும் தெரிவிக்காமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

சாத்தான்குளம் விவகாரம்; தமிழக காவல்துறைக்கு களங்கம்-பாஜக தலைவர் எல்.முருகன்!

இந்த நிலையில், சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்ததாக அவரது நெருங்கிய நண்பராக அறியப்படும் கராத்தே தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.


ஆனால், ரஜினிகாந்த் தனது ட்விட்டர் மூலமோ அல்லது ஒரு அறிக்கையாகவோ இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, பாதிக்கப்பட்ட குடும்பதிற்கு ஆறுதல் தெரிவித்திருக்கலாம். அதனை விடுத்து மறைமுகமாக யாரோ ஒருவர் மூலம் தகவல் தெரிவித்ததை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அத்துடன், தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தின் போது, சமூக விராதிகள் போலீசை தாக்கியதுதான் கலவரத்துக்கே காரணம் என போராட்டக்காரர்களை கடுமையாக விமர்சிக்க தெரிந்த ரஜினிகாந்துக்கு, போலீஸ் விசாரணையின் போது மரணமடைந்த இருவர் விவகாரத்தில் நேரடியாக ஒரு கண்டனத்தையோ, இரங்கலையோ பதிவிட முடியாமல் போனது ஏன் எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அடுத்த செய்தி