ஆப்நகரம்

ரூ.2000 வழங்கிவிட்டு அதை பறிக்கும் நோக்குடன் மதுக்கடைகளை திறப்பதா? ராமதாஸ், டிடிவி கண்டனம்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதியளித்ததற்கு ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 11 Jun 2021, 9:33 pm
கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 14-6-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், 21-6-20021 காலை 6-00 மணி வரை , மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் கொரோனா பரவல் குறைந்துள்ள 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்டியுள்ளார். ராமதாஸின் ட்விட்டர் பதிவில், '' ஊரடங்கு தளர்வுகளின் ஒரு கட்டமாக தமிழ்நாட்டில் மதுக்கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. மக்கள் நலனுக்கு எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது

ஒருபுறம் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கிவிட்டு, மறுபுறம் அதை பறிக்கும் நோக்குடன் மதுக்கடைகளை திறப்பது எந்த வகையில் நியாயம்? கடந்த ஆட்சியில் இத்தகைய போக்கை விமர்சித்த தி.மு.க. இப்போது அதே தவறை செய்யலாமா? ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே!

மதுக்கடைகள் திறக்கப்பட்டால் ஏழைக் குடும்பங்களுக்கு கிடைக்கும் மிகக் குறைந்த வருமானமும் பறிபோய்விடும். குடும்பங்களில் வறுமை அதிகரிக்கும்; வன்கொடுமை பெருகும். இவற்றைத் தடுக்க தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது; மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்!'' என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

முழு ஊரடங்கு நீட்டிப்பு: 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறப்பு..!

அதனை தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பதிவில், '' மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்காக என்று கூறி மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்துள்ள முதல்வர், அதற்கு நேர்மாறாக நோய்த்தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இதன் மூலம் முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய அரசுக்கும் மக்களின் உயிரைப் பற்றித் துளியும் அக்கறை இல்லை என்பதும், 'யார் எப்படிப் போனாலும் தங்கள் கஜானா நிரம்பினால் போதும்' என்று நடந்துகொள்வதும் மிக மோசமான செயல்பாடாகும்.

ஒரு பக்கம் நிவாரணத் தொகை கொடுப்பது போல் கொடுத்து, அதனை டாஸ்மாக் வழியாக பிடுங்கிக் கொள்ளும் தந்திரத்தையே, இவர்களும் பின்பற்றுவது பெரும் அவலமாகும்.

எனவே, கொரோனா நோய்த்தொற்றும் மையங்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ள டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் அறிவிப்பைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' என இவ்வாறு கூறியுள்ளார்.

அடுத்த செய்தி