ஆப்நகரம்

புத்தாண்டு பரிசாக அரசிடம் இதை ஒன்றை மட்டுமே கேட்கிறேன்... ராமதாஸ்

புத்தாண்டு வரை காத்திருக்காமல் குடி பழக்கம் உள்ளவர்கள் இந்த நிமிடமே மது பழக்கத்தை கைவிடுமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

Samayam Tamil 26 Dec 2022, 3:03 pm
புத்தாண்டு வருவதையொட்டி பலரும் அடுத்தாண்டிற்கான திட்டங்களை வகுப்பது வழக்கம். குறிப்பாக, விட நினைக்கும் பழக்கங்களை ஜனவரி 1 வருவதற்குள் விட்டுவிட வேண்டும், புதிய ஆண்டில் அதற்கு மாற்றாக நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தோடு இருப்பார்கள். கெட்ட பழக்கம் வரிசையில், மது, சிகரெட் உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எண்ணமாக இருக்கும்.
Samayam Tamil ramadoss


இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் அரசுக்கும், மது பிரியர்களுக்கும் முக்கிய அறிவுரையை கூறியுள்ளார். இன்று அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் கூறியது; உங்கள் மகளையோ, சகோதரியையோ குடிப்பழக்கம் உள்ள உயரதிகாரிக்கு மணம் முடிப்பதை விட, குடிப்பழக்கம் இல்லாத தொழிலாளிக்கோ, ரிக்‌ஷா ஓட்டுபவருக்கோ திருமணம் செய்து கொடுங்கள் என்று மத்திய இணையமைச்சர் கௌஷல் கிஷோர் கூறியிருக்கிறார். அவரது வார்த்தைகள் உண்மையானவை.

மத்திய அமைச்சரின் வார்த்தைகள் வலி நிறைந்தவை. அவர் எம்.பியாக இருந்த போது அவரது மனைவி எம்.எல்.ஏ. ஆனாலும் மதுவுக்கு அடிமையான மகனை மீட்க முடியவில்லை. இளம் வயதில் அவர் இறந்தார். இளம் வயதில் மருமகள் கைம்பெண் ஆனார். அப்போது அவர்கள் குழந்தையின் வயது 2.

இதே கொடுமை தான் தமிழகத்தில் தெருவுக்கு தெரு நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் இளம் கைம்பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். சாலை விபத்துகள், தற்கொலைகள், மன நல பாதிப்புகள் ஆகியவற்றில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதற்கும் மதுவே காரணம்.

மத்திய அமைச்சர் கௌஷல் கிஷோரின் வலி நிறைந்த வார்த்தைகளை ஆட்சியாளர்களும், பொதுமக்களும் திறந்த மனதுடன் ஆய்வு செய்ய வேண்டும். குடிப்பழக்கம் உள்ளவர்கள் புத்தாண்டில் அல்ல.... நாளை அல்ல.... இன்றே, இந்த நிமிடமே மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்.

மதுவால் நாடு சீரழிவதைத் தடுக்கும் பொறுப்பு அரசுக்கு தான் கூடுதலாக உள்ளது. இளம்பெண்கள் கைம்பெண்களாவதையும், குழந்தைகள் ஆதரவற்றவர்கள் ஆவதையும் தடுக்க தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும். தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்

நேற்றையதினம் ராணிப்பேட்டையில் பாமக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் தலைமையேற்று பேசிய கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது; 55 ஆண்டு காலமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. ஆனால், மக்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. டாஸ்மாக் கடைகளும் பார்களுமே அதிகரித்து வருகிறது. பாமக ஆட்சிக்கு வந்தால் இலவசமாக தரமான கல்வி, சுகாதாரம், மருத்துவம் உருவாக்கி கொடுக்கப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி குடும்பத்தை பாதுகாப்போம்'' என இவ்வாறு கூறினார்.

அடுத்த செய்தி