ஆப்நகரம்

Chennai Rains: வெறும் 2 மணி நேரம் தான்; அப்போ பருவமழைக்கு மொத்தமா காலியா?

தலைநகரில் புரட்டி எடுத்த கனமழையால் பல்வேறு இடங்கள் மழைநீரில் தத்தளித்து வருகின்றன.

Samayam Tamil 23 Oct 2020, 11:03 am
வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் பரவலான மழை பெய்யும். ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த சூழலில் சென்னையில் நேற்று காலை வெப்பம் நிறைந்த வானிலை நிலவியது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாலைப்பொழுது தலைகீழாக மாறியது. நகரின் பல்வேறு இடங்களில் மாலை 4 மணியளவில் கனமழை வெளுத்து வாங்கத் தொடங்கியது. தொடர்ந்து இரண்டு மணி நேரம் பெய்த மழையால் நகரின் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாய் மாறின. நுங்கம்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், அசோக் நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Samayam Tamil Chennai Rains


நுங்கம்பாக்கத்தில் 6 செ.மீ, மீனம்பாக்கத்தில் 4 செ.மீ மழையும் பதிவானது. குறிப்பாக அண்ணா சாலை - திருவல்லிக்கேணி காவல்நிலையம் வரையிலான வாலாஜா சாலை, ஈவிகே சம்பத் சாலை, காலேஜ் சாலை, வள்ளுவர் கோட்டம், பாரதி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் சாலைகளில் மழைநீர் அதிகளவில் தேங்கி நின்றது. ஸ்பென்சர் ஜங்சனில் சாக்கடை நீர் சாலைகளில் ஓடியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த மழைக்கே தாங்காத அரசு குழந்தைகள் நல மருத்துவமனை!

குரோம்பேட்டையில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நியூ காலணி 16வது கிராஸ் தெருவில் பல்வேறு வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, ஊழியர்களை அனுப்பி வைப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு நேரத்திலும் சென்னையில் நல்ல மழை பெய்துள்ளது. நேற்று மாலை இரண்டு மணி நேரத்தில் மட்டும் சென்னையில் 65 மி.மீ மழை பெய்துள்ளது.

இது நடப்பாண்டில் ஒரேநாளில் பெய்த அதிகபட்ச மழையாகும். நடப்பு மாதத்தின் கடைசி வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னையின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. அதாவது பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதிய அளவில் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. முன்னதாக கழிவுநீர் வாய்க்கால்களை ஒழுங்குபடுத்தவும், பருவகால நடவடிக்கைகளுக்கும் ரூ.440 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் இவை எந்தவித பயனும் ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இதுபற்றி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நேற்று வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான மழை பெய்துள்ளது. நகரின் முக்கியப் பகுதிகளில் 4 செ.மீ அளவிற்கு மழை பெய்திருக்கிறது. ரிப்பன் கட்டிடம் அருகே மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரு நாள்களுக்கு வெளுத்து வாங்க போகும் மழை: உங்க ஊர் லிஸ்டுல இருக்கா?

ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளன. புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று நல்ல மழை பெய்திருக்கிறது என்றார். இந்த சூழலில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் வட கடலோர பகுதிகள், வேலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி