ஆப்நகரம்

OBC Reservation: மறுக்கப்படும் சமூகநீதி: இடஒதுக்கீட்டிற்கு தணிக்கை - குரலெழுப்பும் ராமதாஸ்!

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டு தணிக்கை வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளர்.

Samayam Tamil 26 Aug 2020, 11:24 am
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட 313 பேராசிரியர் பணியிடங்களில் 9 பணியிடங்கள் மட்டுமே அப்பிரிவினரைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன. மத்திய பல்கலைக்கழகங்களில் பணி நியமனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டு விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களான டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், வாரணாசி இந்து பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி நிலவரப்படி ஒரேவொரு பேராசிரியர் கூட பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து நியமிக்கப்படவில்லை.
Samayam Tamil Ramadoss


ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு பதிலாக, ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக, 0.77% மட்டும் தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல், இணைப் பேராசிரியர் பணியைப் பொறுத்தவரை 735 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 38 ஓபிசிக்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதாவது இணை பேராசிரியர் பணிகளில் ஓபிசிக்கு 1.39% இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர் பணிகளில் மட்டும் தான் ஓபிசிகளுக்கு சுமார் 16% இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு கடந்த 1990-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

அதிமுகவின் அடி மடியில் கைவைத்த பாஜக: எடப்பாடியின் மாஸ்டர் மூவ்!

சட்டப்போராட்டங்களுக்குப் பின் 27% இட ஒதுக்கீடு 1993-ஆம் ஆண்டில் நடைமுறைப் படுத்தப்பட்டு 27 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் பணிகளில் இட ஒதுக்கீடு சராசரியாக ஒரு விழுக்காடு என்ற அளவில் தான் உள்ளன என்றால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக இட ஒதுக்கீடு திட்டமிட்டு மறுக்கப்படுகிறது என்று தான் பொருள். மத்தியப் பல்கலைக்கழகங்களில் இந்த நிலை என்றால், ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் ஓபிசிகளுக்கான இடஒதுக்கீடு இன்னும் மோசமாக இருக்கிறது. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். எந்த போட்டித் தேர்வாக இருந்தாலும் சரி. பேராசிரியர்கள் உள்ளிட்ட எந்த பணியாக இருந்தாலும் சரி.
பாமக நிறுவனர் அறிக்கை
உயர்பதவிகளை அனுபவிப்பதற்காகவே பிறந்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களைக் காட்டிலும் பிற பிற்படுத்தப்பட்டோரின் செயல்பாடுகளும், திறமையும் மிகவும் சிறப்பாகவே உள்ளன. எனவே பேராசிரியர் பதவி வகிக்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தகுதி இல்லை என்று கூறுவது ஏற்றுக் கொள்ளவே முடியாத பொய். இது ஓபிசிகளுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியை மூடி மறைப்பதற்கான பூச்சு ஆகும். உயர்கல்வி நிறுவனங்களின் பேராசிரியர் பணிக்கு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வந்து விடக் கூடாது என்பதற்காகவே பெரும்பான்மையான பேராசிரியர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படாமல், இணைப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களில் இருந்து பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

அதிலும் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படுவதில்லை. பல நேரங்களில் பதவி உயர்வு மூலமான பேராசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பு கூட, வெளிப்படையாக வெளியிடப்படாமல், வேண்டியவர்களுக்கு மட்டும் தெரிவிக்கப்படுகிறது. அதனால் தான் பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணிக்கு ஓபிசிகளால் வர முடியவில்லை. உதவிப் பேராசிரியர்கள் முழுக்க முழுக்க நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படுவதால் தான், அனைத்து சதிகளையும் முடியடித்து, அப்பதவிகளில் சுமார் 16 விழுக்காடு இடங்களை ஓபிசி வகுப்பினர் பிடித்துள்ளனர். பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணிகளும் முழுக்க, முழுக்க நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட்டால், அவற்றை ஓபிசிகள் அதிக அளவில் கைப்பற்றுவர் என்பது உறுதி.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அவதாரம் எடுத்த விஜய், சங்கீதா: மதுரையில் மீண்டும் அலப்பறை!

எனவே மத்திய அரசின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டு தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஓபிசிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை வேறு யார் கைப்பற்றியுள்ளனர்? அது எவ்வாறு சாத்தியமானது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் ஆட்களை நியமிக்கும் அதிகாரத்தை அந்த நிறுவனங்களின் தலைவர்களிடமிருந்து பறிக்க வேண்டும். அந்தப் பணியை மேற்கொள்ள வெளிப்படைத் தன்மை கொண்ட தேர்வாணையம் அமைக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி