ஆப்நகரம்

விழுப்புரம் மாசு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் சோதனை கட்டுக்கட்டாக சிக்கிய பணம்

விழுப்புரம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நான்கு மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 50ஆயிரத்து800 சிக்கியது.

Samayam Tamil 13 Dec 2018, 5:04 pm
விழுப்புரம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நான்கு மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 50ஆயிரத்து800 சிக்கியது.
Samayam Tamil Money


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் ஏதேனும் பகுதியில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கவும், பெரிய நிறுவனங்கள் தொடங்கவும், மாசு ஏற்பட வாய்ப்புள்ள குவாரிகள் உள்ளிட்டவை அமைக்கவும் இந்த அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும்.

இவ்வாறு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வரும் பொதுமக்களிடம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்நிலையில் சென்னை ஆய்வுக்குழு அலுவலரின் அறிவுரைப்படி மாலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் விழுப்புரம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு திடீரென சென்றனர்.

அப்போது அலுவலகத்தினுள் உதவி பொறியாளர்உள்ளிட்ட அலுவலர்களும் மற்றும் ஊழியர்களும் இருந்தனர். அவர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறாமல் உள்ளேயே அமர வைத்து அலுவலக கதவுகள் மற்றும் ஜன்னல்களை பூட்டி அதிரடி சோதனையை தொடங்கினர்.

அலுவலகத்தில் இருந்த பீரோக்கள், அலுவலர்களின் மேஜை அறைகள் ஆகியவற்றை திறந்து அங்குலம், அங்குலமாக தீவிர சோதனை செய்தனர். அதுமட்டுமின்றி ஏதேனும் பணத்தை பதுக்கி வைத்துள்ளனரா? என்று அலுவலக நுழைவுவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த அதிகாரி ஒருவரின் காரையும் மற்றும் ஊழியர்களின் மோட்டார் சைக்கிளையும் போலீசார் சோதனை செய்தனர்.

மேலும் அலுவலர்கள், ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த வெளிநபர் ஒருவரிடம் போலீசார் விசாரித்தபோது அவர், தான் திண்டிவனம் கீழ்பூதேரியை சேர்ந்தவர் என்றும் கருங்கல் ஜல்லியை உடைத்து எம்சாண்ட் எனப்படும் மணல் தயாரிப்பதற்கான குவாரி அமைக்க அனுமதி கேட்டு வந்ததாகவும், ஏற்கனவே இதற்காக அதிகாரிகளிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சமாக கொடுத்ததாகவும், மேலும் லஞ்சமாக கேட்டதன்பேரில் ரூ.1 லட்சத்தை எடுத்துக்கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார், அந்த அலுவலகம் முழுவதையும் தீவிரமாக சோதனை செய்தனர். இந்த சோதனை இரவு முடிவடைந்தது. சோதனையின்போது அந்த அலுவலகத்தில் இருந்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்து 800 சிக்கியது. இந்த பணத்திற்கு அதிகாரிகள் உரிய கணக்கு காட்டாததால் அவற்றை போலீசார் கைப்பற்றினர். அதோடு சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார், லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர்.

விழுப்புரம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.3 ½லட்சம் சிக்கியது. இந்த பணம் நேற்று ஒரே நாளில் மட்டும் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு அனுமதி கேட்டு வந்த 5 பேரிடம் இருந்து அதிகாரிகள் லஞ்சமாக பெற்றிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படியானால் தினமும் அலுவலகத்திற்கு வரும் மக்களிடம் எவ்வளவு தொகையை லஞ்சமாக பெற்றிருப்பார்கள் என்று போலீசார் தீவிர சாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி