ஆப்நகரம்

சென்னையில் மது போதையில் விபத்து ஏற்படுத்தி, தகராறில் ஈடுபட்ட வாலிபா்

சென்னையில் மது அருந்தி தாறுமாறாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டு காவல் துறையினருடன் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

Samayam Tamil 25 Jun 2019, 3:33 pm
சென்னையில் தாறுமாறாக ஓடி ஆட்டோ, சுற்றுச்சுவரில் மோதி விபத்து ஏற்படுத்திய சொகுசுக் காா். மது போதையில் இருந்த ஓட்டுநரை காவல் துறையினா் கைது செய்து விசாரணை.

சென்னை திருவான்மியூரில் தங்கியிருப்பவர் நவீன். இவரின் சொந்த ஊர் மதுரை மாவட்டம், விளாங்குடி. இவர், மதுரைக்குச் செல்ல காரில் நேற்றிரவு புறப்பட்டார். நீலாங்கரை, கிழக்குக் கடற்கரை சாலையில் கார் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்தது. அதனால் சாலையோரத்திலிருந்த நடைமேடை கடைகளின் மீது கார் மோதியது.

அதன்பிறகும் கார், நிற்கவில்லை. அடுத்து ஆட்டோவின் மீது மோதிவிட்டு சுற்றுச் சுவரில் மோதி நின்றது. இதனால், சொகுசு காா் என்பதால், காரிலிருந்த பலூன் ஓப்பனானது.

நீலாங்கரை காவல் நிலையம் அருகே இந்தச் சம்பவம் நடந்தது.உடனடியாக காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்றனர். காரில் டிரைவர் சீட்டில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரை காவல் துறையினர் மீட்டனர். அப்போது அவர், காவல் துறையினரை சரமாரியாக திட்டினார். அவரை காவல் துறையினா் சமரசப்படுத்த முயன்றனர்.

காரை ஓட்டி வந்தவர், போதையில் இருந்ததால் காவலா்கள் ஒருமணி நேரம் போராடி அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து விபத்தை ஏற்படுத்தியதற்காக அடையாறு போக்குவரத்து புலனாய்வு காவலா்களும், காவல் துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக நீலாங்கரை காவலா்களும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த செய்தி