ஆப்நகரம்

கொரோனாவால் உயிரிழந்தால் ரூ.1லட்சம்: முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்

Samayam Tamil 23 Jul 2020, 4:55 pm
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 45,720 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 1,129 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா உயிரிழப்பு 28,732லிருந்து 29,861ஆக இந்தியாவில் உயர்ந்துள்ளது. கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகள் ஆகிய இரண்டுமே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் பொது முடக்கம் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், UNLOCK நடைமுறை தொடங்கியுள்ளது. அதன்படி, பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால், கிட்டத்தட்ட இயல்புநிலை திரும்பியுள்ளது போன்ற நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் ஓரளவு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதுச்சேரியை பொறுத்தவரை, இதுவரை 2,300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,369 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

கமல் வீட்டுல கொரோனா நோட்டீஸ் ஒட்டுனா வேலைய விட்டு எடுப்பீங்களா: மாநகராட்சிக்கு ஆணையம் கேள்வி!

மேலும், கொரோனா நிவாரண நிதியாக பொது நிவாரண நிதிக்கு ரூ.9.16 கோடி வந்துள்ளது என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக, புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசிடமிருந்து கோரிய நிவாரண நிதி சரியாக கிடைக்காதபோதிலும், புதுச்சேரி அரசின் வருவாயை மட்டுமே வைத்து, கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு சென்னையில் இருந்து வந்தவர்கள் தான் காரணம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, ஊரடங்கு தளர்வில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மாநில எல்லைகள் மூடப்பட்டன. மருத்துவ சிகிச்சைக்கு வருபவர்களை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. உரிய அனுமதியில்லாமல் புதுவைக்குள் நுழையும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி