ஆப்நகரம்

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்... ஏன் அனுமதி மறுப்பு? மீண்டும் துரத்தும் சிக்கல்!

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

Samayam Tamil 29 Sep 2022, 11:57 am

ஹைலைட்ஸ்:

  • தமிழகத்தில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தடை
  • சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி காவல்துறை அதிரடி உத்தரவு
  • காவல்துறை உத்தரவை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தை நாடிய ஆர்.எஸ்.எஸ்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Madras HC
வரும் அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. தமிழக போலீசார் கண்டு கொள்ளாத நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர். அதில், நிபந்தனைகளுடன் ஊர்வலம் நடத்த அனுமதிக்குமாறு தமிழக போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி ஊர்வலத்திற்கு தமிழக போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ள நிலையில், அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீப காலமாக தொடர்ந்து நடந்து வருகின்றன.
அக்., 2ல் ஆர்.எஸ்.எஸ், விசிக ஊர்வலம்... ஷாக் கொடுத்த தமிழக போலீஸ்!
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய அதே நாளில் சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் சில அமைப்புகளும் மனித சங்கிலிக்கு அனுமதி கோரியுள்ளன. சட்டம் - ஒழுங்கை காக்க காவல்துறையினர் இரவு பகலாக ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது.

எனவே ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

நீதிபதி இளந்திரையன் முன்பு ஆர்.எஸ்.எஸ் தரப்பு வழக்கறிஞர்கள் எஸ்.பிரபாகரன், ரபு மனோகர், சந்திரசேகர் ஆகியோர் ஆஜராகி முறையீடு செய்துள்ளனர். அப்போது அவமதிப்பு மனுதாக்கல் செய்யுங்கள் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தரப்பு வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுரை வழங்கினர்.

இதுதொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் தொடர்பான விவகாரத்தில் நாளைய தினமே தீர்வு காணப்பட்டு விடும் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை மாற்று தேதியில் ஊர்வலம் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டால் அதுகுறித்தும் பரிசீலனை செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி