ஆப்நகரம்

சிறுமி ராஜலட்சுமியின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: திருமாவளவன்!

சிறுமி ராஜலட்சுமியின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 5 Nov 2018, 12:29 pm
சேலம் அருகே, தலைதுண்டித்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சிறுமி ராஜலட்சுமியின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil thirumavalavan


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சாமிவேலு, சின்னப்பொண்ணு தம்பதியின் மகள் ராஜலட்சமி (14). இவர் கடந்த வாரம் 22-ம் தேதியன்று, அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவனால் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக தினேஷ்குமாரை கைது செய்த ஆத்தூர் டவுன் போலீசார், அவர் மீது கொலை, ஆபாசமாக பேசுதல், வன்கொடுமை தடுப்புச்சட்டம், போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமி ராஜலட்சுமியின் குடும்பத்தாரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கொலை நடந்த ஓரிரு நிமிடங்களில் குற்றவாளியை அவரது உறவினர்கள் பாதுகாத்துள்ளனர், எனவே சந்தேகத்திற்கு இடமாக கருதப்படும் தினேஷ்குமாரின் மனைவி மற்றும் சகோதரனை குற்றப்பின்னனியில் உட்படுத்தி விசாரனை நடத்த வேண்டும்.

வழக்கினை பெண் காவல் அதிகாரி விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டகுடும்பத்தினர் விருப்பப்படி சிறந்த வழக்கறிஞரை அரசு நியமனம் செய்ய வேண்டும்.

கொலையாளி தினேஷ்குமார் மீது பல வழக்குகள் பதியபட்டிருந்தாலும், குற்றவாளிக்கு எந்த காரணம் கொண்டும் நீதிபதி பிணை வழங்கக் கூடாது. விரைவில் குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் குற்றவாளிக்கு பிணை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி ராஜலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி