ஆப்நகரம்

சேலம் ரயில் கொள்ளை வழக்கு; கொள்ளையர்களை சம்பவ இடங்களில் நடிக்க வைத்து விசாரணை!

சேலம்: ரயில் கொள்ளையர்களை அழைத்துச் சென்று, சம்பந்தப்பட்ட இடங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 10 Nov 2018, 11:45 am
கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி, சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் ரூ.5.78 கோடி பணம் மாயமானது.
Samayam Tamil Train theft


இதுதொடர்பான விசாரணையில் 2 ஆண்டுகள் ஆகியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நாசா உதவியுடன் செயற்கைக்கோள் படங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

அவற்றைக் கொண்டு குறிப்பிட்ட இடங்களின் செல்போன் டவர்களுக்கு வந்து சென்ற தொலைபேசி அழைப்புகளை விசாரித்தனர். இதன்மூலம் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 7 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

அவர்களில் 5 பேரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். ஆனால் 12 நாட்கள் விசாரணை நடைபெற்ற பின்னரும், வங்கிப் பணம் ரயிலில் செல்வது குறித்து யார் தகவல் அளித்தது? கொள்ளையடித்த பணம் எங்கே? என எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த சூழலில் சமீபத்தில் நடைபெற்ற விசாரணையில் கொள்ளையடித்த பணத்தை, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பாகவே செலவு செய்துவிட்டதாக கொள்ளையர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து கொள்ளை நடந்ததாக கருதப்படும் சின்னசேலம், விருத்தாசலம் ரயில் நிலையங்களுக்கு கொள்ளையர்கள் அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அப்போது கொள்ளை நடந்தது எப்படி?

ரயில் மேற்கூரையை துளையிட்டது எப்படி? மேற்கூரையில் எப்படி படுத்து ஒளிந்து கொண்டீர்கள்? என கொள்ளையர்களை நடிக்க வைத்து வீடியாவாக சிபிசிஐடி போலீசார் பதிவு செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி