ஆப்நகரம்

மகளிடம் தவறாக நடந்து கொண்ட விஏஓ மீண்டும் திருமணம் செய்த நிலையில் கைது

மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த அரசு அதிகாரியை காவல்துறையினர் 7 மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்தனர்.

Samayam Tamil 20 Apr 2019, 6:43 pm
பெற்ற மகளிடம் தவறாக நடந்து கொண்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த கிராம நிர்வாக அலுவலர் வேறொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.
Samayam Tamil மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது
மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது


சேலம் ஆத்தூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் கடம்பூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.

இந்நிலையில் அவருடைய மூத்த மகள் தந்தையுடனும் இளைய மகள் தாயாருடனும் வசித்து வந்தனர். அப்போது ஒருநாள் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சரவணன், தனது மகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மூத்தமகள் தாயிடம் கூறியுள்ளார். அதை கேட்டு ஆத்திரமடைந்த தாய் கணவர் மீது ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். கடந்தாண்டு அளிக்கப்பட்ட இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

தன் மீதான வழக்கு குறித்து சரவணன்னுக்கு தெரியவந்த நிலையில், உடனே அவர் தலைமறைவானார். அதை தொடர்ந்து போலீசார் கடந்த நவம்பர் முதல் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் சரவணன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். ஆத்தூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது இன்று அவர் போலீசாரிடம் பிடிப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி