ஆப்நகரம்

இன்னும் ஒரேவாரம் தான்; ரிலீஸுக்கு ரெடியான சசிகலா - அடுத்து என்ன?

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா அடுத்த வாரம் வெளியே வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 23 Oct 2020, 12:10 pm
Samayam Tamil Sasikala
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவரது விடுதலை தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி விட்டு சிறைக்கு சென்றவர் சசிகலா. கட்சியையும், ஆட்சியையும் தன்வசம் வைத்திருக்க வேண்டும் என்பது தான், அவரது எண்ணமாக இருந்தது.

ஆனால் சசிகலா சிறை சென்ற பிறகு, வெளியே பல்வேறு அரசியல் திருப்புமுனைகள் அரங்கேறின. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் அணிகள் கைகோர்த்தன. கட்சி ஓபிஎஸ் வசமும், ஆட்சி ஈபிஎஸ் வசமும் என சமரசம் உண்டானது. மேலும் சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து ஒட்டுமொத்த தூக்கி எறிந்துவிட்டனர்.

இது சசிகலா தரப்பிற்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் சசிகலாவின் ஆதரவாளர்கள் பலரும் இன்னும் அதிமுகவில் இருந்து வருகின்றனர். இவர்கள் சசிகலாவை மீண்டும் அதிமுகவிற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று கருதுவதாக தெரிகிறது. இதனால் சசிகலா எப்போது விடுதலையாவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறையில் சசிகலா உடல்நிலை எப்படி இருக்கிறது? அவரே எழுதிய கடிதம் - சமயம் தமிழ் எக்ஸ்க்ளூசிவ்!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சசிகலா விடுதலை ஆகிவிடுவார் என்று பரப்பன அக்ரஹார சிறைத்துறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதேசமயம் அபராதத் தொகையை செலுத்திவிட்டால் முன்னதாகவே விடுதலை ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், அடுத்த ஒருவாரத்தில் சசிகலா வெளிவருவதற்கான வாய்ப்புள்ளது.

ஏனெனில் கர்நாடக சிறைத்துறை விதிகளின் படி, நன்னடத்தை அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகை கிடைக்கிறது. அப்படி பார்த்தால் கடந்த 43 மாதங்களில் 129 நாட்கள் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. இதனைக் கணக்கிட்டு பார்த்தால் இன்னும் ஒருவாரத்தில் வெளியே வர வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதுபற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறினார்.

அடுத்த செய்தி