ஆப்நகரம்

சசிகலா விடுதலையில் சிக்கல்: அபராதம் செலுத்தினாலும் இப்போதைக்கு வெளியே வர முடியாது!

அபராதம் செலுத்தினாலும் சசிகலா ஜனவரி 20ஆம் தேதிக்கு பின்னரே விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 18 Nov 2020, 9:31 pm
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் விடுதலை தொடர்பான விவாதங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரிதாக கிளம்பியுள்ளன. 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை பதிலளித்துள்ளது. அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால் சிறை தண்டனை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது
Samayam Tamil சசிகலா
சசிகலா


கடந்த ஆகஸ்ட் மாதம் வரை சிறையில் 3 ஆண்டுகள் 5 மாதங்கள் சிறைத் தண்டனையை சசிகலா அனுபவித்துள்ளார். அவரது தண்டனை காலம் நான்கு ஆண்டு என்பதால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அவரது தண்டனை முடிவுக்கு வரும். ஏற்கனவே, 17 நாட்கள் பரோலில் சசிகலா வெளியே சென்றுள்ளார்.ஒருவேளை அவர் மீண்டும் பரோலில் வெளியே சென்றாலோ அபராதத் தொகையை செலுத்த தவறினாலோ விடுதலையாகும் தேதி மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேசமயம், அபராதத் தொகையை செலுத்துவதற்காக மனுத்தாக்கல் செய்த சசிகலா தரப்பு, விடுதலை காலத்துக்கு முன்னதாகவே அவரை வெளியே கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஆனாலும், சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக சிறைத்துறையே முடிவெடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

நெருங்கும் சசிகலா விடுதலை: நீதிமன்றத்தில் இருந்து பறந்த உத்தரவு!

இதனிடையே, சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 லட்சம் அபராத தொகைக்கான வங்கி வரையோலையை (டிடி) பெங்களூரு தனி நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் செலுத்தியுள்ளார். அதன் தொடர்ச்சியாக, சசிகலா செலுத்திய அபராதத் தொகை நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளுக்க்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விடுதலை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அபராதம் செலுத்தினாலும் ஜனவரி 20ஆம் தேதிக்குப் பிறகே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் சேஷமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி