ஆப்நகரம்

இலங்கையில் இருந்து கடிதம்: சசிகலாவின் முதல் அரசியல் அடையாளம்

கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழா மூலம் சசிகலா தனது முதல் அரசியல் அடையாளத்தை பதித்துள்ளார்.

TNN 17 Dec 2016, 10:43 am
சென்னை: கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழா மூலம் சசிகலா தனது முதல் அரசியல் அடையாளத்தை பதித்துள்ளார்.
Samayam Tamil sasikalaa makes political mark lankan president heeds her plea on katchatheevu festival
இலங்கையில் இருந்து கடிதம்: சசிகலாவின் முதல் அரசியல் அடையாளம்


உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதியன்று காலமானார். அதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். மேலும், அக்கட்சியை வழிநடத்தி செல்லப்போவது யார்? அதிமுகவின் சக்தி வாய்ந்த பொறுப்பான பொதுச்செயலாளர் பொறுப்பில் அமரப் போவது யார் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளும், வதந்திகளும், விமர்சனங்களும் எழுந்து வருகிறது. அதிமுக உடைந்து விடும் என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

அதேபோல், அதிமுக-வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என கட்சியின் மூத்த உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர். சசிகலாவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், அவர்கள் அனைவரையும் சரிகட்டி, அதிமுக-வின் பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்பது கிட்டத்தட்ட முடிவாகி விட்டது. அதேபோல், ஆட்சி அதிகாரத்திலும் அவர் பங்களிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி, இதுவரை பின்னணியில் இருந்து செயல்பட்டு வந்தாலும், பொதுவெளியில் சசிகலாவின் பங்களிப்பு என்பது இல்லாமலேயே இருந்தது

இந்நிலையில், கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழா மூலம் சசிகலா தனது முதல் அரசியல் அடையாளத்தை பதித்துள்ளார். கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் இந்த ஆண்டுக்கான வருடாந்திர திருவிழா, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர், ஒத்தி வைக்கப்பட்ட கச்சத்தீவு திருவிழா வருகிற 23-ம் தேதியன்று நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்தது. மேலும், அந்த திருவிழாவில் தமிழக மீனவர்கள் 20 பேர் கலந்து கொள்ளவும் அந்நாட்டு அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில், கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்கும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க போயஸ்கார்டன் வந்த இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானிடம் சசிகலா தெரிவித்திருந்தார்.

சசிகலாவின் கோரிக்கையை இலங்கை அதிபர் சிறிசேன-விடம் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார். இதை ஏற்ற இலங்கை அதிபர், கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்கும் தமிழக மீனவர்களின் எண்ணிகையை 20-லிருந்து 100-ஆக உயர்த்தியுள்ளார். மேலும், இது தொடர்பான கடிதத்தையும், அதாவது பெறுநர் இடத்தில் சசிகலாவின் பெயர் மற்றும் போயஸ் கார்டன் இல்ல முகவரியை குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் மற்றும் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் ஆகிய இருவரிடம் இருந்து சசிகலாவின் பெயருக்கு அனுப்பப்பட்ட அந்த அதிகாரப்பூர்வ கடிதமானது தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கடிதத்தை அவர் போயஸ் இல்லத்தில் சசிகலாவிடம் கொடுத்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

தமிழகத்தில் மீனவர்கள் பிரச்னை தொடர்ந்து வரும் நிலையில், சசிகலாவின் இந்த நடவடிக்கை, முதல் அரசியல் அடையாளத்தை அவருக்கு பெற்று தந்துள்ளது.
Sasikalaa makes political mark, Lankan president heeds her plea on Katchatheevu festival

அடுத்த செய்தி