ஆப்நகரம்

முகிலன் கடத்தப்பட்ட பின்னணி; உண்மையில் என்ன நடந்தது? அதிர்ச்சிகர வாக்குமூலம்!

சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போய், நீண்ட நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இவரிடம் விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசாரிடம், அளித்த வாக்குமூலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 7 Jul 2019, 5:14 pm
தமிழகத்தில் மக்கள் விரோத செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றை தீர்த்து வைக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகளே, பிரச்சனைகளுக்கு அடிநாதமாக விளங்கி வருகின்றன. எனவே அரசின் தவறான செயல்பாடுகளுக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். அந்த வகையில் சமூக செயற்பாட்டாளரான முகிலனின் பங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
Samayam Tamil Mugilan


இவர் ஸ்டெர்லைட், மணல் கொள்ளை, அணு உலை உள்ளிட்டவற்றிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். இதனால் குண்டர் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் முகிலன் மீது தொடரப்பட்டன. இருப்பினும் தனது போராட்டக் குரலை முகிலன் தணித்துக் கொள்ளவில்லை. இந்த சூழலில் கடந்த பிப்ராரி 15ஆம் தேதி, சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ”கொளுத்தியது யார்? ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள்” தலைப்பில் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார்.

அதில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு தமிழக காவல்துறை அதிகாரிகள் தான் காரணம் என்று சுட்டிக் காட்டப்பட்டது. இந்த ஆதாரங்களை வெளியிடுவதால், தனது உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்று கூறியிருந்தார். அன்றைய தினம் இரவு எழும்பூரில் இருந்து மதுரைக்கு ரயில் ஏறினார். அதன்பின்னர் முகிலனைக் காணவில்லை. அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதால், அவரை யாரோ கடத்திவிட்டனர் என்றும், கொலை செய்து விட்டனர் என்றும் கூறப்பட்டது.

அவர் வசம் ஏராளமான ஆதாரங்கள் இருப்பதால், அவற்றை அழிக்கும் நோக்கில் முகிலன் கடத்தப்பட்டிருக்கலாம் என்றெல்லாம் தகவல்கள் பரவின. பல மாதங்களாக எங்கு தேடியும் முகிலனைக் கண்டுபிடிக்க வில்லை. முகிலனை மீட்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போடப்பட்டது. அவர் உயிரோடு தான் இருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்தது. மேலும் தமிழக போலீசார் முகிலனை கடத்தி ரகசிய இடத்தில் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

ஆனால் எதற்கும் ஆதாரம் இல்லை. அவரது ஆதரவாளர்களும், தமிழக மக்களும் முகிலன் மீண்டும் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தனர். இதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். முகிலனை மீட்க தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசாரும், ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததால் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் தாடியுடன் உடல் மெலிந்து, அடையாளம் தெரியாமல் இருப்பது காண்போரை வேதனையடையச் செய்துள்ளது. இதுகுறித்து முகிலனின் மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் சென்னை விரைந்தார். ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, எழும்பூர் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட முகிலன், ”என்னை கடத்திட்டு போறாங்க. என்னை போலீசார் மனநலம் பாதிக்கப்பட வைத்துவிட்டனர்” என்று கோஷம் எழுப்பியவாறே சென்றார். இவரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில், ”என்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றனர்.

நினைவு திரும்பி பார்த்த போது, வேறு ஏதோ ஒரு மாநிலத்தில் இருந்தேன்” என்றும் முகிலன் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரின் வாக்குமூலத்தை போலீசார் கேமரா மூலம் பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. விரைவில் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முகிலனை சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.

அடுத்த செய்தி