ஆப்நகரம்

இட ஒதுக்கீடுக்கு உம்முனும், ஏழு பேர் விடுதலைக்கு கம்முனும் இருக்கும் ஆளுநர் - சீமான் கோபம்

மருத்துவ படிப்பிற்கான அரசு பள்ளி மாணவர்களின் இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்காமல் இருக்கும் தமிழக ஆளுநரை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை

Samayam Tamil 22 Oct 2020, 6:19 pm
தமிழக மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil seeman


சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளத்தாவது, '' மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காதது வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அமைச்சரவையின் முடிவை மக்களால் தேர்வு செய்யப்படாது நியமனப் பதவி மூலம் அதிகாரம் பெற்றிருக்கும் ஆளுநர் தடுத்து முடக்குவது மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவதையே தகர்க்கும் கொடும் செயலாகும்.

நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலத் தகுதி பெறுவது முற்றாக அற்றுப் போய்விட்டது மட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வினால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிற மாணவச் செல்வங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தமிழக மக்கள் அளித்த உணர்வு நெருக்கடியின் விளைவாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும் அதனை அங்கீகரிக்காது கள்ள மவுனம் சாதிக்கும் ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கு மிகப்பெரும் ஜனநாயக படுகொலையாகும்.

ஏற்கனவே 7 தமிழர்கள் விடுதலை குறித்தான மாநில அரசின் முடிவிற்கு மாறாக மௌனம் காத்து விடுதலை கோப்பில் கையெழுத்திட மறுத்து வரும் அவர் தற்போது மருத்துவ மாணவர் இட ஒதுக்கீட்டில் காலதாமதம் செய்வது என்பது தமிழக மக்களின் உள்ளத்து உணர்வுகளை உரசி பார்ப்பதாக உள்ளது.

கடந்த அக்டோபர் 5ம் தேதி தமிழக முதல்வரும் 25-ம் தேதி 5 தமிழக அமைச்சர்களும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து வற்புறுத்திய போதும் கூட அதனை அலட்சியப் போக்குடன் காலம் தாழ்த்துவது 8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தையே அவமதிக்கின்ற படுபாதகச் செயலாகும்.

இது மாநில தன்னாட்சி மீதும் தமிழகத்தின் இறையாண்மையை மீதும் மத்திய அரசு தொடுக்கும் மறைமுகப் போராகும். சமூகநீதியின் அரணாக விளங்கும் இட ஒதுக்கீட்டை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் எனும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் மத்தியில் ஆளும் பாஜக அரசு அதற்காகவே முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை அமல் படுத்தியது.

தீபாவளி முன்பதிவு: போணியாகாத பஸ் டிக்கெட்டுகள்!

மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இவ்வாறு இடங்களை ஒதுக்க மறுத்த மத்திய அரசு வங்கி பணியாளர் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்டோர் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து இடங்களை எடுத்து முற்பட்ட பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி மிகப்பெரிய சமூக நீதியை நிகழ்த்தி இருக்கிறது.

இது மட்டுமல்லாது ஐஐடி ஐஐஎம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு பிரிவில் போதிய மாணவர் சேர்க்கை இல்லை எனக்கூறி நிரப்பப்படாத அந்த இடங்களை முற்பட்ட பிரிவினரை கொண்டு நிறுத்தி சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கும் வேலையை வீரியமாக செய்து வருகிறது. எனவே தமிழக மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்காக ஐடா ஒதுக்கீட்டை இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்'' என இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி