ஆப்நகரம்

செல்லூர் ராஜு பற்ற வைத்த நெருப்பு: பாஜக முதல் திமுக வரை புகையும் மர்மம்!

செல்லூர் ராஜுவின் பேச்சு அதிமுக மட்டுமல்லாமல் பாஜக, திமுகவிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 10 Mar 2023, 3:08 pm
அதிமுகவினரும், பாஜகவினரும் சமூக வலைதளங்களில் மாறி மாறி மோதிக் கொள்வது தொடர்ந்து வருகிறது. இருந்தபோதும் அதிமுகவின் முக்கிய புள்ளிகளோ ‘கூட்டணி தொடர்கிறது. எங்களுக்குள் மோதல் இல்லை’ என்ற பழைய பாடலையே ராகம் மாறாமல் பாடுகின்றனர். அவர்களில் விதிவிலக்காக செல்லூர் ராஜு மட்டும் தனது டிரேட் மார்க் பேச்சின் மூலம் பாஜகவுக்கு ஒரு குட்டு வைத்துள்ளார்.
Samayam Tamil sellur raju thirumavalavan


செல்லூர் ராஜு காட்டம்!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று எம்ஜிஆர் மாளிகை வந்த செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் அண்ணாமலை பேச்சு, பாஜகவினர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை எரித்த சம்பவம் குறித்து கேட்டனர்.

அதற்கு அவர், “எங்கள் கட்சியிலிருந்து பாஜகவில் சேரும்போது இனித்தது. இப்பொழுது அங்கிருந்து இங்கு வரும்போது கசக்கிறதா? பாஜகவிற்கு சகிப்புத்தன்மை வேண்டும். வாயடக்கம் தேவை. வாய்க்கொழுப்புடன் பேசக்கூடாது. மத்தியில் ஆளுகிறோம் என்னும் திமிருடன் பேசக்கூடாது. கூட்டணிக் கட்சிகளின் தோளில் உட்கார்ந்து கொண்டு காதைக் கடிப்பதை அதிமுக பொறுத்துக்கொண்டு இருக்காது. எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்கும் அளவிற்கு பாஜக தரம் தாழ்ந்துவிட்டது.

அண்ணாமலை வாய்க்கொழுப்போடு பேசுவதாகத் தெரிகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள் என்ற எண்ணம் தான் காரணம். ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டுப் பேசுவதற்கு தகுதியே கிடையாது. அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை” என்று காட்டமாக பதிலளித்தார்.
மகளிர் உரிமைத் தொகை: யார் யாருக்கு கிடையாது? ஜெயரஞ்சன் சொன்ன தகவல்!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு அளவுக்கு இல்லையென்றாலும் சிறிய அளவிலேனும் தங்கள் கண்டனத்தை, எதிர்ப்பை பதிவு செய்யாமல் தவிர்ப்பது அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருமாவளவனுக்கு அழைப்பு!

பாஜகவை எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் திருமாவளவனை கூட்டணிக்கு வரச் சொல்லி திமுக கூட்டணியிலும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் செல்லூர் ராஜு.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் ஏற்றுக்கொள்வோம். திருமாவளவன் எங்கள் சகோதரர். திருமாவளவன் மீது ஜெயலலிதா அன்பும், பாசமும் கொண்டவர். எடப்பாடி பழனிசாமி மீதும் பாசம் கொண்டவர்” என்று பேசினார்.
பாஜக அணியில் எந்தெந்த கட்சிகள்? எடப்பாடி தலைமையில் தனி அணி?
அதிமுக - பாஜக கூட்டணி?

பாஜக, பாமக ஆகிய இரு கட்சிகள் இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என பகிரங்கமாக அறிவித்தவர் திருமாவளவன். தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் வந்தாலும் அத்தகைய கூட்டணியில் இருக்க மாட்டேன் என்று திருமாவளவன் கூறியிருக்கிறார். அப்படியிருக்கையில் திருமாவளவனை செல்லூர் ராஜு அழைக்கிறார் என்றால் பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொள்ள முடிவெடுத்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.

முதல்வர் வேட்பாளர் விவகாரம் நினைவு இருக்கிறதா?

இது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம். “அதிமுக எந்த பாதையில் பயணிக்கப் போகிறது என்பது குறித்து செல்லூர் ராஜு குறிப்புணர்த்தியுள்ளார். செல்லூர் ராஜு தானே கூறுகிறார், வேறு மூத்த மாஜிக்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லையே இதனால் இதை அதிமுகவின் கருத்தாக கொள்ளமுடியாது என்று சிலர் கூறலாம். கடந்த காலங்களில் இது போன்ற விவாதங்களை தொடங்கி வைப்பவராக செல்லூர் ராஜு இருந்துள்ளதை புரிந்து கொண்டால் பின் நடக்க இருக்கும் விஷயங்களை யூகிக்க முடியும். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரம் எழுந்து பெரிய சலசலப்பை உருவாகியது. அதன் பின் எதிர்கட்சித் தலைவர் விவகாரம், இறுதியாக ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்து ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டார். இதில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை ஆரம்பித்து வைத்தவர் செல்லூர் ராஜூ தான்.

அவர் தான் முதன்முறையாக தேர்தலுக்குப் பிறகு முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம் என்று திரியை கொளுத்தி போட்டார். அதன் பின்னர் தான் பரபரப்பு பற்றியது. இப்போதும் அவ்வாறு பாஜகவுக்கு எதிராக ஒரு பேச்சை தொடங்கி வைத்துள்ளார். இது விரைவில் பற்றத் தொடங்கும். இதன் மூலம் திமுக கூட்டணியிலும் சலசலப்பு உருவாகும்” என்கிறார்கள்.

திருமாவளவன் நன்றி!

செல்லூர் ராஜுவின் அழைப்பு குறித்து பேசிய திருமாவளவன், “முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக கூட்டணிக்கு விசிக வர வேண்டும் என பேசி இருக்கிறார். அவருடைய அன்பிற்கும், ஆதரவுக்கும் நன்றி. திமுக கூட்டணியில் வலிமையாக, நல்ல இணக்கத்துடன் இருந்து வருகிறோம். திமுக கூட்டணியை அகில இந்திய அளவில் கொண்டு செல்ல இருப்பதே அடுத்த கட்ட பணி” என்று கூறியுள்ளார்.

திமுக முடிவு என்ன?

பாமகவை கூட்டணிக்குள் அழைத்தால் எங்களுக்கு இன்னொரு இடம் தயாராக இருக்கிறது என்று திருமாவும் திமுக தலைமைக்கு இதன் மூலம் தெரியப்படுத்திவிட்டார். பாமகவை கூட்டணிக்குள் சேர்த்தால் அவர்களுக்கு குறைந்தது நான்கு இடங்களையாவது கொடுக்க வேண்டி வரும். ஆனால் திருமாவளவன் கூட்டணியில் இருந்தால் தலித் சமூக வாக்குகள் அனைத்து தொகுதிகளிலும் குறிப்பிட்ட்ட அளவு கிடைக்கும். அதை இழக்க வேண்டாம் என்று திமுக தலைமை நினைப்பதாகவும் கூறுகிறார்கள்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே இருக்கும் நிலையில் இனி என்னென்ன கூத்துகள் எல்லாம் நடக்கப் போகிறது என்பதை பொறுமையாக பார்க்க வேண்டும்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி