ஆப்நகரம்

திராவிட மாடலை எப்படிங்க விமர்சிக்கலாம்.. ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்.. செல்வப்பெருந்தகை ஆவேசம்

திராவிட மாடலை விமர்சித்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 4 May 2023, 3:07 pm
Samayam Tamil selvaperuthagai

சென்னை: திமுக அரசு தனது அடையாளமாக காண்பித்து வரும் திராவிட மாடலை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி விமர்சித்த நிலையில், அவரை உடனடியாக பதவியில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு நேற்று பேட்டி அளித்திருந்தார். அப்போது தமிழக அரசு கூறி வரும் திராவிட மாடலை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது, திராவிட மாடல் ஒரு அரசியல் கோஷம் தான் என்றும், அது காலாவதியான மாடல் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆளுநரின் இந்தப் பேச்சைக் கண்டித்து காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

காலாவதியான கொள்கையா? தமிழ்நாட்டில்‌ அங்கொன்றும்‌, இங்கொன்றுமாக நடக்கும்‌ சில சம்பவங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அமைதிப்‌ பூங்கா என்று எப்படி சொல்ல முடியும் என்று ஆளுநர்‌ கேட்டிருக்கிறார்‌. மேலும்‌, திராவிட மாடல்‌ காலாவதியான கொள்கை என்றும்‌ பேசியுள்ளார்‌. இதற்கு வன்மையான கண்டனத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

மணிப்பூர், உபியில் என்ன நடக்கிறது? இன்றைய தினம்‌, பாஜக ஆளும்‌ மாநிலமான மணிப்பூர்‌ பற்றி எரிகிறது. அங்குள்ள 16 மாவட்டங்களில்‌ 8 மாவட்டங்களில்‌ ஊரடங்கு உத்தரவு அமலில்‌ உள்ளது. உத்தரபிரதேசத்தில்‌ கடந்த ஏப்ரல்‌ மாதத்தில்‌ காவல்துறையினர்‌ பாதுகாப்பில்‌ இருந்த 2 நபர்கள்‌ சுட்டுக்‌ கொல்லப்பட்ட சம்பவமானது இந்தியாவையே அதிர்ச்சியில்‌ ஆழ்த்தியது. இதைப்பற்றியெல்லாம்‌ கருத்து கூறமாட்டார்‌ ஆளுநர்‌. ஏனென்றால்‌ அங்கு பாஜகவினர்‌ ஆட்சி நடைபெற்றுக்‌ கொண்டிருக்கிறது.

பொறுக்க முடியவில்லையா? ஸ்டெர்லைட்‌ நிறுவனத்திற்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தை வெளிநாட்டினர்‌ தூண்டுதல்‌ பேரில்‌ நடைபெற்ற போராட்டம்‌ எனக் கூறி தியாகம் செய்த மக்களை கொச்சைப்படுத்தினார். நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்றத்‌ தேர்தலில்‌ காங்கிரஸ்‌ கட்சியின்‌ தோதல்‌ வாக்குறுதிகள்‌, திராவிட மாடல்‌ ஆட்சியின்‌ தோதல்‌ வாக்குறுதியை ஒத்திருப்பது போல உள்ளது என்று பெரும்பாலானோர்‌ கூறுவதையும்‌, தமிழ்நாடு நம்பர்‌ 1 மாநிலமாக வளர்ச்சியில்‌ முன்னேறிக்‌ கொண்டிருப்பதையும்‌ பொறுத்துக்‌ கொள்ள முடியாத ஆளுநர்‌ இதுபோன்று‌ பேசிக்கொண்டிருக்கிறார்‌.

சந்தேகம் எழுகிறது: ஆளுநர்‌, தான்‌ வகிக்கும்‌ உயர்ந்த பொறுப்பிற்கு மதிப்பளித்து கருத்துக்களைக்‌ கூற வேண்டும்‌. மாறாக, ஆளுநர்‌ பொறுப்பை அவமதிக்கும்‌ செயலில்‌ அவர்‌ ஈடுபடக்கூடாது. இவரது பேச்சுகளை பார்க்கும் போது, தமிழ்நாட்டின் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு, மக்களை ஒருவித அச்சத்தில்‌ ஆழ்த்தி, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கி அதன்‌ மூலம்‌ குறுகிய அரசியல்‌ நோக்கத்தை ஒன்றிய அரசும்‌, ஆளுநரும்‌ நிறைவேற்றிக்‌ கொள்ள முயற்சிக்கிறார்களா? என்ற சந்தேகம்‌ வருகிறது.

உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: ஆளுநர்‌ என்பவர்‌ மாநில அமைச்சரவையின்‌ ஆலோசனை அடிப்படையில்‌ செயல்பட வேண்டும் என்றுதான் அரசியல்‌ சாசனம்‌ சொல்லி இருக்கிறது. அரசியல்‌ சாசனத்தை மீறும்‌ ஆளுநரை உடனடியாக குடியரசுத்‌ தலைவர்‌ திரும்பப்‌ பெறவேண்டும். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி