ஆப்நகரம்

அங்கன்வாடியில் தலித் பெண்கள் பணியிடமாற்றம்; ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

தலித் பெண்களை இடமாற்றம் செய்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Samayam Tamil 13 Jun 2019, 6:39 pm
கடந்த ஜூன் 3ஆம் தேதி, மதுரை மாவட்டத்தில் காலியாக இருந்த 1,500 அங்கன்வாடி காலிப் பணியிடங்களை ஆட்சியர் நாகராஜன் நிரப்ப உத்தரவிட்டார். அதில் திருமங்கலம் தாலுக்காவில் உள்ள எஸ்.வலையப்பட்டி கிராமத்தில் பணியமர்த்தப்பட்ட எம்.அன்னலட்சுமி என்ற தலித் பெண்ணும் ஒருவர். அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராகவும், சமையலராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
Samayam Tamil Dalit Workers


ஆனால் அதற்கு அடுத்த நாளே, கீழவனேரிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய எம்.அன்னலட்சுமி, எஸ்.வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இந்து மக்கள் திருமங்கலத்தில் உள்ள ஐசிடிஎஸ் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு, எஸ்.சி பெண் சமைத்த உணவை, தங்கள் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த இரு பெண்களால் உணவு மாசுபட்டு விடும் என்று அந்த ஊரைச் சேர்ந்த இந்து மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் பணி முடிந்து தங்கள் வீட்டிற்கு செல்வதற்கு அச்சப்படும் சூழல் இருப்பதாக கூறினார். இந்த சூழலில் இந்துக்கள் மற்றும் எஸ்.சி மக்களிடையே மோதல் வெடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகம் இடமாறுதல் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, அன்னலட்சுமியை கீழவனேரிக்கும், மற்றொரு எஸ்.சி பெண் எம்.ஜோதிலட்சுமியை மதிப்பனூருக்கும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பேசிய ஜோதிலட்சுமி, கடந்த 8ஆம் தேதி தலித் காலணியில் நுழைந்த இந்து மக்கள், கதவுகள், வாகனங்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் சில பொதுமக்களுக்கும் காயம் ஏற்பட்டது.

என்னுடைய சொந்த கிராமத்திலேயே என்னால் பணியாற்ற முடியவில்லை என்று வேதனையுடன் கூறுகிறார். இந்த சம்பவம் தொடர்பாக நாகய்யாபுரம் காவல் நிலையத்தில் தலித் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எஸ்.வலையப்பட்டி கிராம அங்கன்வாடியில் பட்டியல் இன பெண்கள் பணியாற்ற எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மதுரை ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, மதுரை ஆட்சியர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி