ஆப்நகரம்

பொள்ளாச்சி அருகே கால்வாயில் கவிழ்ந்த கார்; 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்கு ஆளானதில், 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகினர்.

Samayam Tamil 13 Mar 2019, 10:26 am
கோவை மசக்காளிபாளையத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் பழனி கோவிலுக்கு சென்றிருந்தனர். இதையடுத்து தங்கள் சொந்த ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் பொள்ளாச்சி அருகே கெடிமேடு பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது.
Samayam Tamil Accident


அப்போது எதிர்பாராதவிதமாக பரம்பிக்குளம்-ஆழியாறு-கால்வாய் திட்டம்(பிஏபி) கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் காரில் பயணித்த 2 பெண் குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை காலை 5 மணியளவில் அப்பகுதி மக்கள் நேரில் பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன், கால்வாயில் சிக்கிய உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் உயிரிழந்தவர்கள் பிரகாஷ்(45), அவரது மனைவி சித்ரா(40), மகள் பூஜா(8), பிரகாஷின் மூத்த சகோதரி சுமதி(50), பிரகாஷின் சகோதரர் பன்னீர்செல்வத்தின் மனைவி லதா(42), இவர்களது மகள் தாரணி(9) எனத் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே பொள்ளாச்சியில் பாலியல் கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அதே பகுதியில் நிகழ்ந்த விபத்து, அப்பகுதி குறித்து மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி