ஆப்நகரம்

சகாயம் ஐஏஎஸ் பாதுகாப்புக்கு திடீர் சிக்கல்.. கட்டம் கட்டுகிறதா தமிழக அரசு?

மதுரையில் கிராணைட் குவாரிகளுக்கு எதிராக துணிச்சலாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் சகாயம் ஐஏஎஸ். இதனால் அவரது உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், அவருக்கு வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்பை வாபஸ் வாங்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 21 May 2023, 4:25 pm
சென்னை: தனது நேர்மையால் பொதுமக்களின் மனதில் இடம்பிடித்த சகாயம் ஐஏஎஸ் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்கள் அவர் அரசாங்கத்தால் கட்டம் கட்டப்படுகிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.
Samayam Tamil Collage Maker-21-May-2023-09-44-AM-3804


எவ்வளவு நேர்மையான மனிதர் என்றாலும் அதிகாரம் தரும் போதையும், அதன் மூலம் கேட்காமலே கிடைக்கும் ஆதாயங்களும் ஒரு அரசு அதிகாரியை வழிமாறச் செய்துவிடும். ஆனால் எந்தவொரு சூழலிலும் தன்னைவிட்டு நேர்மைத்தன்மை அகன்றுவிடக்கூடாது என கண்ணியம் காப்பவர்கள் ஒரு சில அதிகாரிகளே.

அப்படியொரு அதிகாரிதான் சகாயம் ஐஏஎஸ். தனது 30 ஆண்டு பணிக்காலத்தில் 25-க்கும் அதிகமான டிரான்ஸ்ஃபர்களை வாங்கியவர் என்பதே அவரது நேர்மைக்கும், கறாருக்கும் சிறந்த எடுத்துக்காட்டு.

அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனம்: அரசியல்வாதிகளுக்கு பெரும் தலைவலியை கொடுத்ததால் எந்த ஆட்சி வந்தாலும் தூக்கியடிக்கப்படும் அதிகாரிகளில் முதன்மையானவராக இருப்பவர் சகாயம். "அய்யோ அவரா.. அவரெல்லாம் நமக்கு லாய்க் பட மாட்டாருப்பா" என அமைச்சர்களே அவரை தங்கள் துறைக்கு செயலாளராக அவரை நியமிக்க எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இதனால் அடுத்தடுத்து ஒப்புசப்பு இல்லாத துறைகளுக்கு தூக்கியடிக்கப்பட்டு வந்தார் சகாயம்.

ஐஏஎஸ் அதிகாரி டூ சமூக சேவகர்:
ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறாததால் ஒருகட்டத்தில் ஆட்சிப்பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். அதன் பிறகு, தற்போது ஆட்சிப்பணிக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்துவது, ஊழலுக்கு எதிரான போராட்டம், ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுவது என சமூக ஆர்வலராக தனது அடையாளத்தை சகாயம் மாற்றிக் கொண்டார்.

துரத்தும் கிராணைட் குவாரி பகை: இந்த சூழலில்தான், சகாயத்துக்கு தரப்பட்ட போலீஸ் பாதுகாப்பை வாபஸ் வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அரசல் புரசலாக பேச்சுகள் அடிபடுகின்றன. மதுரை கலெக்டராக இருந்த போது, கிராணைட் குவாரிகளின் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக சகாயம் எடுத்த நடவடிக்கைகளால் பல கிராணைட் குவாரிகள் மூடப்பட்டன. பல கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் அவரை தீர்த்துக்கட்ட பயங்கரமான ரவுடிப்படைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. ஆனால், அவரை பாதுகாக்க அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போலீஸ் பாதுகாப்பு வாபஸா?
பின்னர், தானே சட்டப்போராட்டம் நடத்தியதன் விளைவாக, அவருக்கு சிறப்பு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றமே உத்தரவிட நேரிட்டது. இதன் தொடர்ச்சியாக, அவருக்கு சிறப்பு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த பாதுகாப்பை வாபஸ் வாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விஏஓ கொலைக்கு எதிர்ப்பு: அண்மையில் தூத்துக்குடியில் மணல் கடத்தல் கும்பலால் விஏஓ லூர்து பிரான்சிஸ் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதற்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்தார் சகாயம். "லூர்து பிரான்சிஸ் மரணத்துக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். 24 மணிநேரத்துக்குள் டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சகாயம் ஆவேசமாக பேட்டி அளித்திருந்தார். இதுதான் அவர் கட்டம் கட்டப்படுவதற்கு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் வட்டத்தில் பேசப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை.

பொதுமக்கள் கோரிக்கை: சகாயத்தின் நேர்மையான அணுகுமுறையாலும், மக்கள் நலனுக்காக அவர் எடுத்த நடவடிக்கைகளாலும் கிராணைட் முதலாளிகள் பல லட்சம் கோடியை இழந்திருக்கிறார்கள். இதற்கு காரணமான சகாயத்தை அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பார்கள். ஒரு நேர்மையான அதிகாரியின் உயிரை பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாயக் கடமை. எனவே, சகாயத்துக்கு கொடுக்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பை அரசு திரும்பப்பெறக் கூடாது என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி