ஆப்நகரம்

பாஜகவை கழட்டிவிட மெகா ப்ளான்.. காங்கிரஸை நெருங்கும் எடப்பாடி.. ஸ்டாலினுக்கு 'செக்'

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்திருப்பது அதிமுகவுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் பாஜகவிடம் இருந்து விலகி காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் அதிமுகவுக்கு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 16 May 2023, 11:20 am
சென்னை: கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜக அடைந்திருக்கும் படுதோல்வி தமிழக அரசியல் களத்திலும் எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது. இதன் ஒருபகுதியாக, பாஜக உடனாக கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸுடன் அணி சேர அதிமுக தலைமை தீவிரமாக யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Samayam Tamil Collage Maker-15-May-2023-10-44-PM-1934


கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாஜக மீதான பிம்பத்தையே மாற்றி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கர்நாடகா தேர்தலில் தோல்வி அடைந்ததன் மூலமாக, தென்னிந்தியாவிலேயே பாஜக இல்லை என்கிற நிலைமையை உருவாக்கி விட்டது. இதன் தாக்கம் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்நிலையில், தமிழக அரசியல் களத்திலும் இது எதிரொலித்துள்ளது. மிகப்பெரிய செல்வாக்குடன் இருந்த கர்நாடகாவிலேயே பாஜக படுதோல்வி அடைந்திருக்கும் போது, தடமே பதிக்காத தமிழ்நாட்டில் அக்கட்சி என்ன செய்துவிட போகிறது என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இதுதான் அதிமுகவையும் பதட்டம் அடையச் செய்திருக்கிறது.

புலம்பும் அதிமுக: பாஜக உடன் கூட்டணி வைத்ததால் தான், 2021 சட்டமன்றத் தேர்தலிலும், அண்மையில் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் தாங்கள் தோல்வி அடைந்ததாக அதிமுகவினர் புலம்பி வருகின்றனர். வட மாநிலங்களை போல மதவாத அரசியல் தமிழகத்தில் எடுபடாது என்பது அதிமுகவுக்கு நன்கு தெரியும். இருந்தபோதிலும், டெல்லி பாஜக தலைமை சொல்வதை தட்ட முடியாமல்தான், பாஜகவை அதிமுக தோளில் சுமந்து வருகிறது.

சிறுபான்மையினர் வாக்குவங்கி:
ஆனால் இனியும் டெல்லிக்கு பயந்து, பாஜகவை உடன் வைத்திருக்க வேண்டுமா என்ற எண்ணத்தை கர்நாடகா தேர்தல் முடிவுகள் அதிமுக தலைமைக்கு கொடுத்துள்ளதாக அக்கட்சியின் சீனியர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே மூன்று துண்டுகளாக சிதறிகிடக்கும் அதிமுகவுக்கு வாக்கு வங்கி கணிசமாக குறைந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த சமயத்தில், பாஜகவுடன் தொடர்ந்து உறவு கொண்டாடுவது கொஞ்சம் நஞ்சம் இருக்கும் சிறுபான்மையினரின் வாக்குகளையும் துவம்சம் செய்துவிடும் என்பது அதிமுகவுக்கு கூடுதல் பயத்தை கொடுத்துள்ளது.

காங்கிரஸை நெருங்க முடிவு: 2024 நாடாளுமன்றத் தேர்தல் தான், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கப் போகிறது. எனவே, பாஜக கூட்டணியுடன் மீண்டும் களம் இறங்கும் விஷப்பரீட்சை வேண்டாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அவருக்கு நெருக்கமான சகாக்கள் கூறி வருகிறார்களாம். எனவே, பாஜகவை கழட்டிவிட்டு காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தால் என்ன என்று அதிமுக அதிகார வட்டத்தில் இருப்பவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள் எனக் கூறப்படுகிறது. இதற்கு பல சாத்தியங்களும் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திமுகவுக்கு செக்: கர்நாடகா தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தெம்பில் காங்கிரஸ் இருக்கிறது. இதனால் நாடு முழுவதும் அக்கட்சிக்கு மவுசு கூடியுள்ளது. இதை வைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிடம் அதிக சீட்டுகளை காங்கிரஸ் கேட்கும். இதற்கு திமுக நிச்சயம் ஒத்துவராது. அப்போது ஏற்படும் இழுபறி சூழலை பயன்படுத்தி, காங்கிரஸுக்கு கணிசமான சீட்டுகளை ஒதுக்கி அக்கட்சியை தன்பக்கம் அதிமுக இழுக்க வாய்ப்புள்ளதாக விஷயம் அறிந்த பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை, அதிமுக இதை செய்தால் திமுகவுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. .
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி