ஆப்நகரம்

மங்களூரு குண்டுவெடிப்பு: மதுரையில் சிறப்பு போலீசார் விசாரணை!

மங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக மதுரையில் பல்வேறு இடங்களில் மங்களுர் சிறப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்

Authored bySM Prabu | Samayam Tamil 26 Nov 2022, 11:59 am
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள நாகுரி பகுதியில் கடந்த 19ஆம் தேதி ஓடும் ஆட்டோவில் திடீரென மர்ம பொருள் வெடித்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் உயர் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்றும், காஸ் அடுப்பு போல் உள்ள பொருள் ஒன்றும் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
Samayam Tamil மதுரையில் சிறப்பு போலீசார் விசாரணை
மதுரையில் சிறப்பு போலீசார் விசாரணை


அந்த விபத்தில் சிக்கி, ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அதில் பயணம் செய்த பயணி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மங்களூருவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. பயணி குறித்து விசாரணை நடைபெற்ற நிலையில், அவர் சிவமொகா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த ஷாரிக் (வயது 22) என்பது தெரியவந்தது. மேலும், அவர் குக்கர் குண்டுடன் ஆட்டோவில் பயணித்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஷாரிக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வெடிகுண்டு சம்பவத்தில் அவர் மூளையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தில் ஆய்வு செய்த கர்நாடகா டிஜிபி பிரவீன் சூட், மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்தது விபத்து அல்ல என்று தெரிவித்திருந்தார். மேலும், பெரிய பாதிப்பை ஏற்படுத்த பயங்கரவாதிகள் தயாரானதற்கான அடையாளம் போல் தெரிவதாகவும் அதிர்ச்சிகர தகவலையும் அவர் தெரிவித்தார். மத்திய அரசின் விசாரணை ஆணையங்களுடன் இணைந்து கர்நாடக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கர்நாடகா டிஜிபி பிரவீன் சூட் தெரிவித்திருந்தார்.

மாடுகளுக்கு அம்மை நோய்: தடுப்பு மருந்து தட்டுப்பாட்டால் நிகழ்ந்த அவலம் - இபிஎஸ் குற்றச்சாட்டு!
தொடர்ந்து, ஷாரிக்கின் மைசூர் வீடு மற்றும் உறவினர், நண்பர்களின் வீடுகளில் அதிரடியாக கர்நாடக மாநில போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு டைரி சிக்கியது. அதில், பயங்கரவாதி ஷாரிக் தமிழகத்தின் கோவை, சேலம், மதுரை, நாகர்கோவில் ஆகிய 4 நகரங்களுக்கு வந்து சென்ற விவரம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மங்களூர் சிறப்பு போலீஸ் அதிகாரிகள் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஷாரிக் மதுரையில் தங்கியதாக கூறப்பட்டதாக சந்தேகிக்கும் பகுதிகளான மதுரை டவுண்ஹால் ரோடு, கட்ராபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தினர். தங்கும் விடுதிகளில் உள்ள வருகைப்பதிவேடு விவரங்களையும் கைப்பற்றி அவர்கள் விசாரணை நடத்தினர்.

முன்னதாக, கோவை டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதமடைந்ததோடு, காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஜமேஷா முபின் வீட்டில் இருந்து வெடி பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட 75 கிலோ வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர். அவரது கூட்டாளிகள் ஆறு பேரையும் கைது செய்துள்ளனர். மேலும், கோவை கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபின் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக என்ஐஏ தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி