ஆப்நகரம்

“வலி தாங்காம, அம்மா துடிச்சா...” கருணை கொலை செய்த மகன்!

தாய் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன், போலீசில் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

Samayam Tamil 29 Jul 2020, 11:04 am
சென்னையில் பல நோயால் மிகவும் சிரமப்பட்டு வந்த தாய் மீது கருணை கொண்டு, மகன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil சித்தரிக்கப்பட்டவை
சித்தரிக்கப்பட்டவை


ஸ்ரீபெரும்புதூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் துரை. வயது 66. இவர் மனைவி கோவிந்தம்மாள். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் பெயர் ஆனந்தன். வயது 36. இந்த குடும்பம் துணிகளுக்குச் சலவை செய்வதன் மூலம் பணம் ஈட்டி வருகின்றனர். வறுமையின் பிடியில் வாழும் குடும்பம்.

கோவிந்தம்மாள் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார். இதற்காகக் கடந்த பிப்ரவரி மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அப்போது முதல் கோவிந்தம்மாள் படுத்தப்படுக்கையாகி விட்டார். அதுபோக, இவர் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த கோவிந்தம்மாள் பிறரின் உதவியையே நாடியிருக்கும் சூழலே இருந்துவந்துள்ளது. வலியால் தினமும் கடுமையாக வேதனைப்பட்டுள்ளார் கோவிந்தம்மாள். இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை முதல் கோவிந்தம்மாளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

வலியைப் பொறுக்க முடியாமல், தன்னை கொன்றுவிடும்படி தனது மகன் ஆனந்தனிடம் கோவிந்தம்மாள் கெஞ்சியுள்ளார். அதிர்ச்சியடைந்த ஆனந்தன் தனது தாயை உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால் கோவிந்தம்மாள் மருத்துவமனை வர மறுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை தனது பணியை முடித்துவிட்டு துரை வீடு திரும்பியுள்ளார். அப்போது கோவிந்தம்மாள் ரத்த வெள்ளத்தில் செத்துக் கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த துரை, சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

வி.எச்.பி, பாதுகாப்பு எஸ்ஐ சுட்டுத் தற்கொலை, அதிர்ச்சி பின்னணி!

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோவிந்தம்மாள் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேவேளை கோவிந்தம்மாளைக் கொலை செய்தது மகன் ஆனந்தன்தான் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஆனந்தனைக் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், “அம்மா வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அதனால்தான் கொலை செய்தேன். சிகிச்சைக்கும் வராமல், அவர் கஷ்டப்படுவதைப் பார்க்க முடியவில்லை” என ஆனந்தன் கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், கோவிந்தம்மாள் கொலை குறித்துக் கூறுகையில், “இந்த குடும்பம் மிகவும் வறுமையில் சிரமப்பட்டு வந்துள்ளது. ஊரடங்கு காரணமாகத் தொழிலும் நலிவடைந்துள்ளது. இதனால் கோவிந்தம்மாளுக்கு மருந்துகள் கூட வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது” என்றார். ஆனந்தன் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி