ஆப்நகரம்

கோத்தபய ராஜபக்சவின் வெற்றி உலகத் தமிழர்களின் ஏமாற்றம்: மு.க.ஸ்டாலின்

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் கோத்தபய ராஜபக்சவின் வெற்றி உலகத் தமிழர்களுக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும் அளித்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 18 Nov 2019, 3:59 pm
இலங்கையின் தற்போதைய அதிபராக உள்ள மைத்ரிபால சிறிசேன வின் பதவிக்காலம் வரும் ஜனவரி 9 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து, இலங்கையின் 7 -ஆவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் சனிக்கிழமை (நவம்பர் 16) நடைபெற்றது.
Samayam Tamil stalin


12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில், காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியளவில் நிறைவு பெற்றது. உடனுக்குடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில் கோத்தபய ராஜபக்ச சுமார் 52.25 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதுகுறித்து தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச, 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது கண்டு, ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்திருக்கிறார்கள்.

கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியை, இன்றைய சூழலில் ஜனநாயக ரீதியாகக் கடந்து போகவும் முடியாது. அவருடைய பழைய வரலாறு- ஈழத்தமிழ் மக்களுக்கு முற்றிலும் எதிரானது. அதனால் ஏற்பட்ட கொடுமையான விளைவுகளையும், இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கும் பிரச்சினைகளையும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும், உலக நாடுகளும் அறியும்.

முன்னர் கொண்டிருந்த பகை, ஆதிக்க மேலாண்மை உணர்ச்சியிலிருந்து அவர் விடுபட்டு, தமிழ் மக்களும் அரசியல் சட்ட ரீதியாக இலங்கையின் அனைத்து உரிமைகளும் படைத்த குடிமக்களே என்பதை உணர்ந்து, அதற்கேற்ப மனசாட்சியுடனும், மனிதநேயத்துடனும், சமத்துவத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் எனவும், அது ஒன்றே அவருடைய அரசியல் வாழ்க்கையில் பொருள் பொதிந்த புதிய பாதையாக அமைந்திடும் என்றும், இந்த உலக சமுதாயம் எதிர்பார்க்கிறது.”

என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததது.

அடுத்த செய்தி