ஆப்நகரம்

டாஸ்மாக் கடைகள் திறப்புக்காக முன்னேற்பாடுகள் தீவிரம்!

மே 7ஆம் தேதியன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Samayam Tamil 6 May 2020, 11:40 pm
கொரோனா பாதிப்பு காரணமாக அரசு அமல்படுத்திய 144 தடை உத்தரவின்படி கடந்த 44 நாட்களாக அத்தியாவசியக் கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளும் அடங்கும்.
Samayam Tamil டாஸ்மாக் கடைகள் திறப்புக்காக முன்னேற்பாடுகள் தீவிரம்


மதுக் கடைகள் அடைக்கப்பட்டதால் ஏராளமான பிரச்சினைகள் உருவாகின. ஆங்காங்கே டாஸ்மாக் கடைகள் உடைக்கப்பட்டு மது பாட்டில்கள் திருடப்பட்டன. திருட்டுத்தனமாக மது விற்றவர்களிடமிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஏராளமான இடங்களில் கள்ளச்சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டு கைது நடவடிக்கைகள் நடந்தேறின.

இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்தது. அதன்படி டாஸ்மாக் கடை திறப்பிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முகக் கவசங்கள் அணிந்து வரவேண்டும், கடை முன்பு தடுப்புகள் அமைக்க வேண்டும், ஒரு நபருக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே மதுபானம் வழங்கப்படும், மது வாங்க வருபவர்களுக்கு டோக்கன் முறை பின்பற்றப்படும் என பல்வேறு விதிமுறைகளையும் அரசு அறிவித்தது. இவற்றிற்கெல்லாம் உச்சமாக மதுபானங்களுக்கு ரூ.20 முதல் விலையேற்றமும் அறிவிக்கப்பட்டது.

இதன் அடுத்த கட்டமாக இன்று குடோன்களில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை டாஸ்மாக் கடை ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் காவல்துறை முன்னிலையில் அவரவர் கடைகளுக்கு எடுத்துச் சென்றனர். மேலும் கடைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. அரசு டாஸ்மாக் கடை திறப்பது மதுப்பிரியர்களுக்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மதுபானங்களுக்கு குறிப்பிட்ட விலையேற்றம் அறிவிக்கப்பட்டது மதுப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு உத்தரவினால் பலரும் வேலையில்லாமல் தவித்து வரும் சூழ்நிலையில் மது விலையேற்றம் பெரும் கவலையளிப்பதாக குடிமக்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி