ஆப்நகரம்

கஜாவை தொடர்ந்து வடகிழக்குப் பருவமழை: கூரைகளை இழந்த வீடுகளுக்கு தார்ப்பாய் வழங்க உத்தரவு!

கஜா புயலில் கூரை இழந்த வீடுகளுக்கு தற்காலிக தார்பாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்

Samayam Tamil 23 Nov 2018, 5:23 pm
கஜா புயலில் கூரை இழந்த வீடுகளுக்கு தற்காலிக தார்பாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பது:
Samayam Tamil edapadi palanisamy


‘கடந்த 16.11.2018 அன்று அதிகாலை அதி தீவிர ‘கஜா’ புயல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கரை கடந்தது. இந்த அதிதீவிர புயலினால் டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயின. அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக, பெருமளவு உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.

எனினும், புயலின் கடுமையான தாக்கத்தால் வீடுகள், பயிர்கள், மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மிக அதிக அளவில் சேதம் அடைந்தன. ‘கஜா’ புயல் கரையினை கடப்பதற்கு முன்பும், கடந்த பின்னரும், பல்வேறு நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்டோர் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், பால், வேட்டி, சேலை, பாய், போர்வை போன்ற வசதிகளும், சுகாதார மற்றும் மருத்துவ வசதிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

‘கஜா’ புயல் மற்றும் கன மழையின் தாக்கத்தினால் முழுவதும் சேதமடைந்த குடிசை வீடு ஒன்றுக்கு 10,000 ரூபாயும், பகுதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 4,100 ரூபாயும் வழங்க நான் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன். முழுவதும் சேதமடைந்த குடிசைகளுக்கும், வீடுகளுக்கும் பதிலாக தகுதி வாய்ந்த நபர்களுக்கு புதியதாக வீடு கட்ட உரிய நிதி உதவி வழங்கப்படும் எனவும் நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான வீடுகளின் கூரைகள் சேதம் அடைந்துள்ளன. தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவ மழையிலிருந்து வீடுகளை பாதுகாப்பதற்கு ஏதுவாக கூரை மேல் தற்காலிகமாக போடுவதற்கு

தார்ப்பாய் ஷீட்டுகள் அளித்தால் உதவிகரமாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. எனவே, ஏழை, எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டு, கூரைகள் பாதிக்கப்பட்ட வீடுகளில் தற்காலிகமாக கூரை அமைத்துக் கொள்ள தார்ப்பாய் ஷீட்டுகளை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தமிடிநநாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக வாங்கி, உடனடியாக வழங்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்’.

இவ்வாறு கூறியுள்ளார்.

அடுத்த செய்தி