ஆப்நகரம்

பெரியார் சிலை காவி சாயம், ஸ்டாலின் சூப்பர் விளக்கம்!

கோவையில் உள்ள பகுத்தறிவு தந்தை பெரியார் சிலைக்கு மீது நடந்த தாக்குதல் குறித்து ஸ்டாலின் கருத்து...

Samayam Tamil 17 Jul 2020, 1:37 pm
எதிர்க் கேள்விகளை எழுப்பியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார் பெரியார் என்பதைச் சுட்டிக்காட்டி, கோவை பெரியார் சிலை அவமதிப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil பெரியார் சிலை காவி சாயம், ஸ்டாலின் சூப்பர் விளக்கம்!
பெரியார் சிலை காவி சாயம், ஸ்டாலின் சூப்பர் விளக்கம்!


கோவை, பொள்ளாச்சி சாலையில் உள்ள பெரியார் முழு உருவச் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் பூசிச் சென்றுள்ளனர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

பெரியாரிய சிந்தனையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலர் இந்த விவகாரத்தைக் கண்டித்து போராட்டங்கள் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர். மாநிலம் முழுவதிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் இந்த விவகாரத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

போராட்டங்கள், கண்டனங்கள் வலுத்து வரும் இந்த சூழலில், திமுக தலைவர் ஸ்டாலின் பெரியாரின் பாணியில் ஒரு விளக்கத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
“என் மீது செருப்பு வீசப்பட்ட அதே இடத்தில்தான் எனக்குச் சிலை வைத்துள்ளனர்” எனக் கூறியவர் தந்தை பெரியார். புகைப்படத்தை எரிக்க நினைத்தவருக்குத் தனது படத்தை அச்சிட்டு தந்தவர் பெரியார். தனக்கு எதிராகக் கேள்விகளைத் தொடுத்தவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார் அவர். அதனால்தான் அவர் பெரியார். சமூகத்தில் சிறியோர்க்கும் சேர்த்துத்தான் பெரியார் உழைத்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டாலின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளது சிந்தனையூட்டும் வகையில் உள்ளதாக திமுகவினர் பெருமிதம் தெரிவிக்கின்றனர். 2021 தேர்தல் களத்தை இப்போதே அரசியல் கட்சிகள் மறைமுகமாக உருவாக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், ஸ்டாலின் இந்த கருத்தைப் பதிவிட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

பெரும் பரபரப்பு... பெரியார் சிலைக்குக் காவி சாயம், கலவரத் திட்டமா?

முன்பு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டுப் புறப்பட்ட பெரியார் மீது ஒரு செருப்பு வீசப்பட்டது. அப்போது, பெரியாரைச் சுற்றியிருந்தவர்கள் கடும் கோபமடைந்தனர். உடனடியாக அந்த இடத்திலிருந்து பெரியாரை அனுப்பி வைக்க வேண்டும் என முயன்றனர்.

ஆனால் பெரியார், “ஒரு செருப்புதான் வந்துள்ளது. இதை வைத்து நமக்கும் பயனில்லை, தனியாக ஒரு செருப்பை மட்டும் வைத்து வீசியவருக்கும் பயனில்லை. அதனால் மற்றொரு செருப்பும் வரட்டும்” எனக் கூறி, மறு செருப்பு வீசப்பட்டதும் அதை எடுத்துச் சென்றார். இந்த நிகழ்வு இப்போதைய நேரத்தில் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி