ஆப்நகரம்

தூத்துக்குடிக்கு செல்லும் அனைத்து பேருந்து சேவைகளும் நிறுத்தம்!

தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதாலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாலும் அங்கு போக்குவரத்து சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 23 May 2018, 1:37 pm
தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதாலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாலும் அங்கு போக்குவரத்து சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil தூத்துக்குடிக்கு செல்லும் அனைத்து பேருந்து சேவைகளும் நிறுத்தம்!
தூத்துக்குடிக்கு செல்லும் அனைத்து பேருந்து சேவைகளும் நிறுத்தம்!


தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேற்று 100-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கு, மக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பின்னர் தடையை மீறி மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் தூத்துக்குடியிலிருந்து நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

திருச்செந்தூர், கோவில்பட்டி, நெல்லை செல்லும் தனியார் பேருந்துகளும், தூத்துக்குடி சுற்றுவட்டாரப்பகுதிகளுக்கு செல்லும் டவுன் பேருந்துகளின் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், நெல்லை, வழியாக ராஜபாளையத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் அரசுப் பேருந்து நெல்லையில் நிறுத்தப்படுகின்றன.

மேலும் தூத்துக்குடி கலவரத்தில் 17 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டதாக போக்குவரத்து கழகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதையும் கண்டித்தும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பதவி விலக கோரியும் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் தமிழகம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

அடுத்த செய்தி