ஆப்நகரம்

சாலையில் கிடந்த ரூ.2.15 லட்சத்தை கலெக்டரிடம் ஒப்படைத்த வியாபாரி

சாலையில் கிடந்த ரூ.2.15 லட்சம் பணப் பையை கறும்புச்சாறு வியாபாரி கலெக்டரிடம் நேரில் ஒப்படைத்துள்ளார்.

Samayam Tamil 7 Sep 2018, 1:35 pm
நெல்லை: சாலையில் கிடந்த ரூ.2.15 லட்சம் பணப் பையை கறும்புச்சாறு வியாபாரி கலெக்டரிடம் நேரில் ஒப்படைத்துள்ளார்.
Samayam Tamil bkj


நெல்லை பாளையங்கோட்டை ஏ.ஆர். லைன் சாலையில் கரும்புசாறு விற்பனை செய்கிறார் திம்மராஜபுரத்தைச் சேர்ந்த ஆயிரம். இவர் கடந்த 4ஆம் தேதி மாலை தன் கடை முன் கவனிப்பாரற்று கிடந்த ஒரு பையைப் பார்த்துள்ளார்.

அதனை எடுத்துப் பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக பணமும் திருமண அழைப்பிதழ்களும் இருப்பதைக் கண்டிருக்கிறார். பையை தவற விட்டவர்கள் வந்து விசாரிக்கக்கூடும் என எதிர்பார்த்து இரண்டு நாட்கள் தானே அந்த பையை பத்திரமாக வைத்திருந்திருக்கிறார்.

யாரும் வராத நிலையில் திங்கட்கிழமை காலை நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷை நேரில் சந்தித்து விவரத்தைக்கூறி, பையை உள்ளபடியே ஒப்படைத்துள்ளார் ஆயிரம். கலெக்டர் ஷில்பா அவரது நேர்மையை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

உடனடியாக பைக்கு உரியவர் யார் என விசாரணை நடத்தியபோது, பிராஞ்சேரி சித்தன்பச்சேரியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் பையை தவறவிட்டது தெரியவந்தது. பெருமாள் தன் சகோதரரின் இல்ல திருமணத்திற்காக சேர்த்து வைத்த ரூ.2.15 லட்சம் பணமும் திருமண அழைப்பிதழ்களும் அதில் இருந்ததாகக் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை வரவழைத்த கலெக்டர் பையை அவரிடம் ஒப்படைத்துள்ளார். பெருமாள், வியாபாரி ஆயிரத்துக்கும் கலெக்டருக்கும் நன்றி தெரிவித்து பையை வாங்கிச் சென்றுள்ளார்.

அடுத்த செய்தி