ஆப்நகரம்

மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம்: தலைமை செயலாளர் எச்சரிக்கை!

தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்

Samayam Tamil 18 May 2021, 9:13 pm
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுதவிர தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
Samayam Tamil தலைமை செயலாளர் இறையன்பு
தலைமை செயலாளர் இறையன்பு


இதையடுத்து, கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு தமிழக அரசு அதிகபட்ச கட்டணம் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டது. அத்துடன், முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழும், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பொதுமக்கள் சிகிச்சை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சில தனியார் மருத்துவமனைகள் அரசின் உத்தரவை மீறி கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம், மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பது, அரசின் இலவச சேவைகளுக்கு கையூட்டு பெறுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்டாலினை பின்பற்றுவாரா பிரதமர் மோடி?
தனியார் மருத்துவமனைகள் மற்றும் வணிக நிறுவனங்களைச் சார்ந்த சிலர் மேற்கொள்ளும் சட்டத்திற்குப் புறம்பான மனிதாபிமானமற்ற செயல்கள் முதல்வரின் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது என்றும், அது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஆணையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு உத்தரவு


இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, அரசின் இலவச சேவைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களிடம் கையூட்டு பெறுவது போன்ற மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. தவறு செய்யும் அலுவலர்கள் மீது பணிநீக்கம் உட்பட துறைரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். எந்த நிலையில் உள்ள அலுவலராயிருப்பினும் அல்லது எந்த நிறுவனமாக இருந்தாலும், புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, தவறு நடக்கக்கூடிய இடங்களில் கண்காணிப்புப் பணியினையும் தீவிரப்படுத்தப்படும். மேற்படி செயல்கள் குறித்து, உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசுத் துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் காவல்துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆகியோர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி