ஆப்நகரம்

சென்னை யமஹா, ராயல் என்பீல்டு நிறுவனத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் - உற்பத்தி பாதிப்பு!

சென்னை: இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களான யமஹா, ராயல் என்பீல்டு ஆகியவற்றில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Samayam Tamil 26 Sep 2018, 12:38 pm
இதுகுறித்து பேசிய ராயல் என்பீல்டு தொழிற்சங்க துணைத் தலைவரும், உழைக்கும் மக்கள் வர்த்தகச் சங்கத் துணைத் தலைவருமான ஆர்.சம்பத், ராயல் என்பீல்டு நிறுவனத்தில் கடந்த 24ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் என்பீல்டு தொழிற்சங்க ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
Samayam Tamil Strike


நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஒரகடம் தயாரிப்பு ஆலைக்கு ரூ.150 கோடியை நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இங்கு 1,50,000 யூனிட்கள் செயல்பட்டு வருகின்றன. தினசரி 750 வாகனங்கள் தயாரிக்கப்படும். போராட்டம் தொடங்கியதில் இருந்து ஒரு வாகனம் கூட தயாரிக்கப்பட வில்லை.

தகுதி காலத்தில் இருக்கும் 120 தொழிலாளர்களை நிர்வாகம் நிரந்தரமாக்கவும் இல்லை. பணி நீக்கம் செய்யவில்லை. அதேசமயம் தொழிற்சாலைக்குள் அனுமதிக்கவும் மறுக்கின்றனர். மேலும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஏற்கவும் மறுக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி, வேலைநிறுத்த அறிவிப்பு குறித்து தொழிற்சங்க கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் பேச்சுவார்த்தை நடத்த நிறுவனம் முன்வர மறுக்கிறது. எனவே வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது தவிர, எங்களுக்கு வேறு வழியில்லை என்று சம்பத் குறிப்பிட்டார். ஒரகடத்தில் உள்ள யமஹா இந்தியா தயாரிப்பு நிறுவனத்தில் 700 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 40% உற்பத்தி மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று காஞ்சிபுர மாவட்ட சிஐடியு தலைவர் எஸ்.கண்ணன் தெரிவித்துள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்ட யமஹா மோட்டார் இந்தியா தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த இரு நிர்வாகிகளை தொழிற்சாலை நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. இந்த சங்கம் முறையாக பதிவு செய்யப்பட்ட ஒன்று. இந்நிலையில் பணி நீக்கத்தைக் கண்டித்து, யமஹா நிறுவன ஊழியர்கள் 21ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் தொழிற்சாலைக்குள் உண்டு, உறங்கி போராடி வருகின்றனர். 800 நிரந்தர தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. தற்போது 2,000 ஒப்பந்த தொழிலாளர்கள் சீரமைப்பு பணிகளை மட்டும் மேற்கொண்டு வருகின்றனர். தங்கள் கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான இ-மெயிலிற்கு யமஹா நிறுவனம் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்று தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Strike hits production at Chennai plants of Royal Enfield, Yamaha.

அடுத்த செய்தி