ஆப்நகரம்

அரசுப் பணியாளர்கள் இரண்டாவது திருமணம் செய்தால் நடவடிக்கை

அரசுப் பணியாளர்கள் முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டால் அவர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க உயர்நிதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

Samayam Tamil 26 Jul 2019, 4:03 pm
அரசுப்பணிகளில் இருப்போர், இரண்டாவது திருமணம் செய்ததாக புகார்கள் எழுந்தால், துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வழிகாட்டுதல்களை பிறப்பிக்க தமிழக நிர்வாகத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
Samayam Tamil Marriage


மதுரையைச் சேர்ந்த தேன்மொழி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது கணவர் காவலராக பணியில் சேர்ந்து உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர். எங்களுக்கு 1982ல் திருமணமான நிலையில், சில வருடங்களுக்கு பிறகே அவருக்கு ஏற்கனவே முத்துலெட்சுமி என்பவருடன் திருமணம் நடைபெற்று 3 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் கணவர் மீது உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். சமர தீர்வு மையம் மூலமாக, இரு குடும்பத்தையும் கவனித்துக் கொள்வதாக எனது கணவர் தெரிவித்தார். அவர் 2011ல் இறந்து போன நிலையில், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் எனக்கு வழங்கப்படவில்லை. ஆகவே அவற்றில் ஒரு பங்கை எனக்கும் வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், "பொது சேவைப்பணிகளில் இருக்கும் அரசு ஊழியர்கள் தொடர்பான இது போன்ற பிரச்சினைகள் அதிக அளவில் இருப்பது தெரியவருகிறது. ஆனால் அந்த பிரச்சினைகள் பணியில் இருக்கும் போது தெரிவதில்லை. அவர்கள் இறந்தபின் அல்லது ஓய்வு பெற்ற பின் பணப்பலன்களை வழங்க கோரி வழக்கு தொடரும் போதே இவை வெளிவருகின்றன.

இரு திருமணங்களை புரிவது, நன்னடத்தை ஆகாது. இது சட்டப்படி குற்றமும் கூட. ஆனாலும் பல அதிகாரிகள், இதனை கருத்தில் கொள்ளாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்து கொள்கின்றனர். காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் இரண்டாம் திருமணம் தொடர்பான பிரச்சினையை சமரச தீர்வு மையம் தீர்த்து வைத்தது அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் உள்ளது.

இது போன்ற பிரச்சினைகள் தெரிய வருகையில் உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். தமிழக அரசு ஓய்வூதிய விதிப்படி குடும்ப ஓய்வூதியத்தை தனது மனைவிக்கு வழங்க பரிந்துரைக்கலாம். ஒரு முறை பதிவு செய்தபின் மனைவி இறந்தால் தவிர வேறு காரணங்களுக்காக இதில் மாற்றம் செய்ய இயலாது.

இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது. தமிழக நிர்வாகத்துறை செயலர், ஓய்வூதியத்திற்காக மனைவி பெயரை பரிந்துரைக்கும் ஆவணங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் இரண்டாவது திருமணம் செய்தது தொடர்பான புகார்கள் எழுந்தால், துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்" எனவும் வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

அடுத்த செய்தி