ஆப்நகரம்

1,131 மதிப்பெண் வாங்கியும் சித்தாள் வேலை செய்யும் மாணவர்!

பிளஸ் 2 தேர்வில், 1,131 மதிப்பெண் பெற்றும், மேல்படிப்புக்கு உதவ ஆதரவின்றி, தாய், தந்தையை இழந்த மாணவர் தவித்து வருகிறார்.

TNN 16 May 2017, 11:59 am
நங்கவள்ளி: பிளஸ் 2 தேர்வில், 1,131 மதிப்பெண் பெற்றும், மேல்படிப்புக்கு உதவ ஆதரவின்றி, தாய், தந்தையை இழந்த மாணவர் தவித்து வருகிறார்.
Samayam Tamil student strugle to continue his higher studies after getting 1131 marks in 12th exam
1,131 மதிப்பெண் வாங்கியும் சித்தாள் வேலை செய்யும் மாணவர்!


தர்மபுரியின் மணியதஹள்ளியைச் சேர்ந்த சத்யராஜ், 17. இவர், சேலம் மாவட்டம், நங்கவள்ளியில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதியில் தங்கி, வனவாசி அரசு ஆண்கள் பள்ளியில், பிளஸ் 2 படித்தார்.

தேர்வு முடிவில், தமிழ் - 177; ஆங்கிலம் - 170; வரலாறு - 199; பொருளியல் - 190; வணிகவியல் - 200; கணக்குப்பதிவியல் - 195 என, 1,131 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். ஆனால், குடும்ப சூழலால், தொடர்ந்து, கல்லூரியில் சேர்ந்து படிக்க வசதியில்லாமல், கட்டடப் பணியில் சித்தாள் வேலை செய்து வருகிறார்.

இவர், தமிழக முதல்வர் பழனிசாமியின் இடைப்பாடி தொகுதியில் படித்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, மாணவர் சத்யராஜ் கூறியதாவது: எனக்கு மூன்று வயதாக இருந்தபோது, என் தாயும், ஐந்து வயதாகும் போது தந்தையும் இறந்து விட்டனர். ஆறாம் வகுப்பு முடிக்கும் வரை, என் அத்தை வீட்டில் வளர்ந்து படித்து வந்தேன். பின், நங்கவள்ளியில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் தங்கி, மேல்படிப்பை தொடர்ந்தேன். விடுமுறையில் உறவினர்களுடன், பெங்களூருவில் சித்தாள் வேலை செய்து வந்தேன். அதிக மதிப்பெண்கள் பெற்ற தகவலை கேட்டு எனது பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.

என்னுடன் பயின்ற மாணவர்கள் 'அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்' என, பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் ஆலோசனை பெற்று வருகின்றனர். 'நான் படித்து கலெக்டராக வேண்டும்' என, ஆசை உள்ளது. ஆனால், கல்லூரியில் சேர்ந்து படிக்க, வறுமை தடையாக உள்ளதால், மீண்டும் சித்தாள் வேலைக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. நான் கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவினால், படித்து முன்னேறி பலருக்கு உதவியாக இருப்பேன்.’ என்றார்.

அவருக்கு உதவ அவரது மொபைல் எண், 86752 05734, 85265 46452 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

அடுத்த செய்தி