ஆப்நகரம்

செந்தில் பாலாஜிக்கு சிக்கல்? எதிர்பார்த்து காத்திருக்கும் பாஜக -தர்மசங்கடத்தில் ஸ்டாலின்

செந்தில் பாலாஜி சட்டவிரோத பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இரு தினங்களில் தீர்ப்பு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 13 May 2023, 3:12 pm
திமுக அரசு மீது கடந்த இரு ஆண்டுகளாக அதிகளவில் விமர்சனங்கள் எழாமல் இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைமை லேசாக மாறத் தொடங்கியிருக்கிறது.
Samayam Tamil mk stalin senthil balaji


பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை குறிவைத்து வெளியான ஆடியோ தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது துறை மாற்றப்பட்ட நிலையில், அந்த ஆடியோவில் இடம்பெற்ற 30 ஆயிரம் கோடி விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

உடனடியாக மற்றொரு திமுக அமைச்சரை குறிவைத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க பாஜக திட்டமிட்டு வரும் நிலையில் முக்கிய வழக்கு ஒன்றின் தீர்ப்பு வெளியாக உள்ளது.

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கில் தான் உச்ச நீதிமன்றம் மே 15ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செந்தில் பாலாஜி அதிமுக அரசில் அமைச்சராக இருந்த போது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை பெற்றுத் தருவதாக கூறி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் செந்தில் பாலாஜி மீது பதிவு செய்த 3 வழக்குகளும் பல ஆண்டுகளாக எம்பி, எம்.எல்.ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை இருந்து வருகின்றன.

திமுகவில் இன்னொரு அமைச்சருக்கு சிக்கல்: பாஜக கையில் அடுத்த ஆடியோ?

இந்த வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது அமலாக்கத்துறை.

இந்த வழக்கினை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணமுராரி, சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் நடந்த இந்த வழக்கின் விசாரணையின் போது, "செந்தில் பாலாஜிக்கு அனுப்பப்பட்ட சம்மனை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின் வாதிட்டார்.

செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத்துறையின் வாதங்களை எதிர்த்து பல்வேறு தகவல்களை அடுக்கினார். இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு திங்கள்கிழமை வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை கொடுத்தால், செந்தில்பாலாஜிக்கு உடனடியாக எந்த சிக்கலும் ஏற்படாது. சில மாதங்களுக்கு அடுத்தக்கட்ட மேல்முறையீடு என்று நீண்டுகொண்டே செல்லும். அதேபோல் இரு நீதிபதிகளும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துவிட்டால் எந்த சிக்கலும் அவருக்கு வராது.

இரண்டு நீதிபதிகளும், அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தால், செந்தில்பாலாஜிக்கு சிக்கல் உருவாகும் என்கிறார்கள்.

உதயச்சந்திரன் இடத்தில் புதிய அதிகாரி? கோட்டையில் நடக்கும் மிகப் பெரிய மாற்றம்!

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில் திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தாலோ, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலோ அதை தங்களது அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்த பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தயாராக இருப்பதால் இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை செந்தில் பாலாஜிக்கு எதிராக தீர்ப்பு அமைந்தால் என்ன செய்வது என திமுக தலைமை யோசித்து வருகிறது. அதிமுக ஆட்சியில் நடைபெற்றதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாவோம் என பின்வாங்குமா அல்லது செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக நிற்குமா என இப்போதே பட்டிமன்றம் தொடங்கிவிட்டது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி