ஆப்நகரம்

10.5% இடஒதுக்கீடு வன்னியர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்: மருத்துவர் ராமதாஸ் உறுதி

வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாகவும், முதலமைச்சர் மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 18 Sep 2022, 11:45 am
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் வன்னியர் இட ஒதுக்கீட்டில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீர வணக்க நாள் கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் எம்.கே .முரளி தலைமையில் நடைபெற்றது.
Samayam Tamil Dr Ramadoss
கோப்புப்படம்


இந்த கூட்டத்தில் பாமக கௌரவத்தலைவர் ஜி.கே.மணி, மாநில நிர்வாகிகள் இசக்கிபடையாச்சி, தீரன், பு.தா.அருள்மொழி, என்.டி,சண்முகம், சக்கரவர்த்தி, சரவணன், இளவழகன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர் இட ஒதுக்கீட்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், "வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு கட்டாயம் கிடைக்கும். இரண்டு நாட்களுக்கு முன் தமிழக முதல்வரிடம் இட ஒதுக்கீடு குறித்து பேசிய போது இட ஒதுக்கீட்டை தருவதாக உறுதியளித்தார் அவர் அளித்துள்ள உறுதி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.


இதனால் இட ஒதுக்கீட்டிற்காக போராட வேண்டிய அவசியம் இருக்காது. கண்டிப்பாக இட ஒதுக்கீடு கிடைத்துவிடும். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் அப்போது இருந்தது இதற்காக அப்போது பல கட்ட போராட்டங்களை பாமக நடத்தியது. எப்போதும் போராட்டம் குணம் உள்ளவன் இந்த ராமதாஸ் இப்போதும் போராட தயாராக உள்ளேன். இம்மாவட்டத்தை மூன்று மாவட்டங்களாக பிரித்ததும் பாமக தான். சமூக நீதிக்காக பல போராட்டங்கள் நடந்தாலும் உலக அளவில் இட ஒதுக்கீட்டிற்காக பாமக நடத்திய 7 நாள் சாலை மறியல் போராட்டம் தான் பெரிய போராட்டம்" என்று பேசினார்.

முன்னதாக வி.சி மோட்டூரில் பாமக கொடியையும் மருத்துவர் ராமதாஸ் ஏற்றி வைத்தார். பாமக கூட்டத்தில் இட ஒதுக்கீட்டு தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் முழக்கங்களை எழுப்பி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

அடுத்த செய்தி