ஆப்நகரம்

கலைக்கப்படுகிறதா ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்? டிஜிபி எடுத்த அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸை பயன்படுத்த காவல்துறை தலைமையகம் தடை விதித்துள்ளது.

Samayam Tamil 5 Jul 2020, 1:11 pm
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை - மகன் ஆகியோர் காவல்துறை கஸ்டடியில் அதிர்ச்சியூட்டும் வகையில் உயிரிழந்தனர். அதாவது விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு இரவு முழுவதும் விடாமல் அடித்து, துன்புறுத்தி கொடூர கொலையை அரங்கேற்றி இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் பெண் காவலர் ஒருவர் துணிந்து வாக்குமூலம் அளித்ததில் பல்வேறு அதிர்ச்சிகர விஷயங்கள் உலகிற்கு தெரியவந்துள்ளன. இந்த வன்முறையில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசிற்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
Samayam Tamil FOP


இதுதொடர்பாக விசாரித்து உண்மைகளை வெளிக்கொண்டு வருவோம் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசிற்கு இன்று காலை தடை விதிக்கப்பட்டது.

ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மக்களுக்கு எதிரி ஆனது எப்படி?

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு காவல் நிலைய பணிக்கோ, ரோந்து பணிக்கோ ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்தக் கூடாது என்று அனைத்து மாவட்ட எஸ்.பிக்களுக்கும் காவல்துறை தலைமையகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக பணிகளுக்கு மட்டும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை கலைப்பது பற்றி ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சாத்தான்குளம் மட்டுமல்லாது ஊரடங்கு நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கைகளில் லத்தியுடன் பொதுமக்கள் மீது தடியடி நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக இருப்பதற்காக உருவாக்கப்பட்ட ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸின் செயல்பாடுகள் பெரும் அதிருப்திக்கு ஆளாகி இருக்கிறது.

எல்லை மீறும் நடவடிக்கைகளா? - பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸிற்கு அதிரடி தடை!

சீருடை இல்லாத காவலர்கள் என்று அன்போடு அழைக்கப்பட்ட காலம் மாறி அடியாட்கள் என்று திட்டி தீர்க்கும் அளவிற்கு நடந்து கொள்வதாக புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் காவல்துறையின் தற்போதைய நடவடிக்கை பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி