ஆப்நகரம்

குடும்ப அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு... ஜூன் 10ஆம் தேதி மறந்துடாதீங்க!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு முகாம் குறித்து பிரத்யேக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை பயன்படுத்தி பயனாளர்கள் தங்களின் குறைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 8 Jun 2023, 8:01 pm
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைத்து வருகின்றன. அதில் முக்கியமானது அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம். குறைந்த விலையில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்து மக்கள் தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. இவை அனைத்தும் தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
Samayam Tamil tamil nadu government announced pds special camp for ration card holders in chennai region on june 10
குடும்ப அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு... ஜூன் 10ஆம் தேதி மறந்துடாதீங்க!


குடும்ப அட்டைகளுக்கு சலுகைகள்

இதுதவிர பொங்கல் பரிசு தொகுப்பு, நிவாரணத் தொகை உள்ளிட்டவையும் கிடைக்கின்றன. குடும்ப அட்டைகளுக்கு தேவையான பொருட்களை விநியோகிப்பதில் மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் போதிய நிதியுதவி செய்து வருகிறது. குடும்ப அட்டைகளை பெறுவதற்கு அரசின் இ-சேவை மையங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

சென்னை மண்டல அறிவிப்பு

மேலும் https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று உரிய விவரங்களை அளித்து கட்டணம் செலுத்தி குடும்ப அட்டைகளை பெற முடியும். இதையடுத்து குடும்ப அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள மக்கள் குறைதீர் முகாம்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை மண்டலத்தில் நடைபெறவுள்ள முகாம் குறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் இன்று (ஜூன் 8) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

​மக்கள் குறைதீர் முகாம்

அதில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஜீன் 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வரும் 10.06.2023 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

​என்னென்ன சேவைகள்?

இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை அல்லது நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை பெற முடியும்.

​அங்கீகாரச் சான்று​

மேலும், நியாய விலைக் கடைகளில் பொருட்களை பெற நேரில் வருகை தர முடியாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவிக்கலாம்.

அடுத்தடுத்து முகாம்கள்

ஒட்டுமொத்தமாக குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சேவை அடுத்தடுத்து அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக நடத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எழுத்தாளர் பற்றி
மகேஷ் பாபு
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி