ஆப்நகரம்

சென்னை: பொதுமக்களுக்கு இலவச வெங்காயம்..! வியாபாரிகள் சங்கம் செய்தது ஏன்?

வெங்காய விலை உயர்வை கண்டித்து, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக சென்னையில் ஆர்பாட்டம் நடத்தினர்.

Samayam Tamil 23 Oct 2020, 4:32 pm
தமிழகத்தில் வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பெரிய வெங்காயத்தைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து லாரிகளில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளுக்கு விற்பனைக்கு வருகின்றன.
Samayam Tamil file pic


ஆனால், கனமழை காரணமாக அங்கிருந்து வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா காலகட்டத்தில் வெங்காயம் விலை திடீர் ஏறுமுகம் கடந்தால் எளிய மக்களின் எட்டாக்கனியாக மாறியுள்ளது. இந்த நிலையில், வெங்காய விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆர்பாட்டம் நடத்தினர். அப்போது, பொதுமக்களுக்கு இலவசமாக வெங்காயம் வழங்கி அரசின் கவனத்தை ஈர்த்தனர்.

அதனையடுத்து, வியாபாரிகள் சங்க பேரவை ஒருங்கிணைப்பாளர் அருண் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, '' தமிழகத்தில் 1 கோடி குடும்பங்களுக்கு போதுமான வெங்காயம் இல்லாமல் பற்றாக்குறையில் உள்ளது. விலை உயர்வுக்கு மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் சரியான முறையில் கடைகளை ஒதுக்க வேண்டும். வெங்காயங்களை பதப்படுத்த புதிதாக கிடங்குகளை ஏற்படுத்த வேண்டும்.

வெங்காய விலை எப்போது குறையும்? உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம்!

எல்லாவகையான காய்கறியும் பணக்காரர் கேற்றவாறு ஆகிவிட்டது, கடந்த ஆறு மாத காலமாக நாங்கள் தொடர்ந்து கோயம்பேட்டில் இடம் ஒதுக்க வேண்டி போராட்டம் நடத்தி வருகிறோம். இதை அரசாங்கத்திற்கு வலியுறுத்தும் விதமாக இன்று வெங்காயத்தை பொதுமக்களுக்கு இலவசமாக கொடுத்து எங்களுடைய போராட்டத்தை வெளிப்படுத்துகிறோம். வெங்காயத்தை கிடங்குகளில் பதப்படுத்தி வைக்கலாம் அதை செய்யத் தவறிவிட்டது தமிழக அரசு'' என இவ்வாறு அந்த பேட்டியில் கூறினார்.

அடுத்த செய்தி